கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்தால் ஒட்டுமொத்த நாடே  சோகத்தில் மூழ்கியுள்ளது. 275 பேர் உயிரிழப்புக்கு காரணமான இந்த விபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


 இந்த கோர விபத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சகோதரர்கள் 3 பேர் இந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அண்ணன் - தம்பிகள்:


மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ளது தெற்கு 24 பர்கானஸ் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள சரணிகாலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஹரன்காயன். அவருக்கு வயது 40. அவரது தம்பிகள் நிஷிகாந்த் காயன் ( வயது 35), திபாகர் காயன் ( வயது 32). மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 3 பேரும் தமிழ்நாட்டில் சிறு, சிறு தொழில்கள் செய்து வந்தனர்.


தமிழ்நாட்டில் வேலை பார்த்து வந்த அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் சென்றனர். பின்னர், மீண்டும் பணத்தேவைக்காக 3 பேரும் தமிழ்நாட்டிற்கு சென்று பணியாற்ற வேண்டும் முடிவு செய்துள்ளனர். இதற்காக, கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்நாடு நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.


3 பேர் உயிரிழப்பு:


ஆனால், துரதிஷ்டவசமாக அந்த ரயில் கோர விபத்தில் சிக்கியதில் சகோதரர்கள் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே விபத்தில் அண்ணன்- தம்பி 3 பேரும் உயிரிழந்த சம்பவம் சரணிகாலி கிராமம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. உயிரிழந்த சகோதரர்களின் குடும்பத்திற்கு பலரும் ஆறுதலும், இரங்கலும் தெரிவித்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு மேற்கு வங்காள அரசு சார்பிலும் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ரயில் விபத்தில் வட இந்தியாவில் இருந்து தமிழ்நாடு நோக்கி வந்தவர்கள் அகால மரணம் அடைந்துள்ளனர். அவர்களில் மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த மாவட்டத்தில் மட்டும் சுமார் 110 பேர் காயம் அடைந்துள்ளனர். 44 பேர் பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.


மீண்டும் ரயில் சேவை:


ஒடிசாவில் ரயில் விபத்தில் தடம்புரண்ட ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டு 51 மணி நேரத்திற்கு பிறகு நேற்று இரவு மீண்டும் அந்தப்பாதையில் சரக்கு ரயில் இயக்கப்பட்டது. ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக நேரில் சென்று பார்வையிட அமைச்சர்கள் சிவசங்கர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான குழு நேரில் சென்று ஆய்வு செய்தனர் என்பதும், தமிழ்நாடு திரும்பிய அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சென்று ஆய்வு குறித்து விளக்கம் அளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: TN School Reopening: குறையாத வெயில் தாக்கம்; பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுகிறதா? முழு விவரம்..


மேலும் படிக்க: Amit Shah Met Wrestlers: ஒருவழியாக மல்யுத்த வீரர்களை சந்தித்த அமித் ஷா..! பாஜக எம்.பி. மீது பாலியல் குற்றச்சாட்டு