முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு முறையும் புதிய விவாதங்களை நடத்த முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அணை பராமரிப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் கேரள தலைமை செயலருக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று உச்சநீதிமன்றம் கேரள மாநிலத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


முல்லைப்பெரியாறு விவகாரத்தில் 2014 ஆம் ஆண்டின் இறுதி தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் மனுக்களாக தற்போதைய மனுக்களை எடுத்துக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் நீரைத் தேக்கும் விவகாரம் தொடர்பாகவும், அணையின் பாதுகாப்பு தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், ஏ.எஸ்.ஒகா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.


இந்நிலையில் இன்றைய வழக்கு விசாரணை நடைபெற்றபோது, முல்லை பெரியாறு அணை தொடர்பான மேற்பார்வைக் குழுவை தொழில்நுட்பக் குழுவாக மாற்ற பரிந்துரை செய்வதாக நீதிபதிகள் கூறினர். மேலும் இந்த தொழில்நுட்பக்குழு பரிந்துரை செய்யும் அணைத்தயும் அந்தந்த மாநில அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுதொடர்பாக குழு வேண்டுமெனில் உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டது. முல்லைப்பெரியாறு அணையை பலப்படுத்தும் எந்த திட்டமும் தமிழகத்திடம் இல்லை என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.



இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு அரச உச்சநீதிமன்றத்தில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் பராமரிப்பு பணிகளை செய்ய விடாமல் கேரள அரசு வேண்டுமென்றே தடுப்பதாகவும், சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு, கனமழை காரணமாக அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அணை பாதுகாப்பாகவே உள்ளதாகவும் கூறியுள்ளது. ஆய்வு நடத்த தமிழ்நாடு அரசு தயாராகவே உள்ளதாகவும், அதற்கு முன்னர் அணையை பலப்படுத்தும் பணிகளான மரம் வெட்டுவது, சாலை போடும் பணிகள், பேபி அணையை பலப்படுத்த தேவையான பொருட்கள் கொண்டு செல்ல கேரள அரசு இடையூறாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "முல்லை பெரியாறு அணையில் எதை செய்வது என்றாலும் கேரள எல்லைக்குள் சென்றுதான் மேற்கொள்ள வேண்டி உள்ளது. ஆனால் நிறைய நேரங்களில் கேரளா தமிழகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது," என வாதிட்டார். இதைத் தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மேற்பார்வை குழுவின் பரிந்துரைகளை இரு மாநிலங்களும் சரிவர கடைபிடிப்பது இல்லை என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், "மேற்பார்வைக்குழுவின் பரிந்துரைகளை கேரள அரசு செயல்படுத்தாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பதாகும்.



முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா இடையூறு செய்தால் உச்சநீதிமன்றத்தை தமிழ்நாடு நாடலாம். இதற்காக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றால் கூட அதனை செய்ய தயாராக நீதிமன்றம் உள்ளது. கண்காணிப்பு குழு ஒரு தலைப்பட்சமாக நடக்கிறது என மனுதாரர் கூற வேண்டிய அவசியம் இல்லை. முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் கேரள தலைமை செயலருக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும்," என்று எச்சரித்து வழக்கை ஒத்திவைத்தனர். முன்னதாக , முல்லை பெரியாறு அணைக்கு பராமரிப்பு பணிகள் மற்றும் தேக்கடியில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம்,குடியிருப்பு, விருந்தினர் மாளிகை ஆகிய கட்டிடங்களில் பராமரிப்பு பணிகளுக்காக தளவாட பொருட்களை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் குமளி வழியாக தேக்கடி கொண்டு சென்றனர்.ஆனால் அப்போது, கேரள வனத்துறையினர் தளவாட பொருட்களை கொண்டு செல்ல அனுமதி தரவில்லை. மேலும் பெரியாறு புலிகள் காப்பக இயக்குனரிடம் அனுமதி பெற்று வருமாறும் தெரிவித்தனர். இதனால் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இந்த தகவல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆகியோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழக விவசாயிகளிடையே கொதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.