Prajwal Revanna: ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளரான ப்ரஜ்வால் ரேவண்ணா, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. 


கர்நாடக அரசு உத்தரவு:


முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், தற்போதைய ஹாசன் தொகுதியின் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க, கர்நாடக அரசு  சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. அதோடு தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலிலும், பாஜக கூட்டணி சார்பில் ஹாசன் தொகுதியில் அவர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். 


அவர் பதிவு செய்து வைத்திருப்பதாக கூறப்படும் பல பெண்கள் அடங்கிய,  ஆயிரக்கணக்கான செக்ஸ் வீடியோக்கள் தேர்தல் நடைபெறும் நேரத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த வீடியோக்கள் அடங்கிய ஏராளமான பென் ட்ரைவ்கள் பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் மைதானம் போன்ற பல பொது இடங்களில் தூக்கி வீசப்பட்டு இருந்தன. 


புகாரும் - முதலமைச்சர் உத்தரவும்..!


ரேவண்ணாவின் குடும்பத்தைச் சேர்ந்த பலர் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட ஒரு பெண் முன் வந்து புகார் அளித்ததாக கர்நாடக மாநில மகளிர் ஆணையத்தின் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த புகார் தற்போது மாநில காவல்துறைத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுதொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “பிரஜ்வால் ரேவண்ணா பாலியல் வீடியோ வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடக மாநில மகளிர் ஆணையம் இந்த வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு விசாரணையை கோரியது, அவர்களின் மேல்முறையீட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். 


இதனிடையே, ரேவண்ணா தற்போது இந்தியாவை விட்டு வெளியேறி, ஜெர்மனியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 






பாஜக கூட்டணிக்கு சிக்கல்:


ரேவண்ணா விவகாரம் தொடர்பாக பேசிய துணைமுதலமைச்சர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதலமைச்சர் எச்.டி.குமாரசாமியிடம், பிரஜ்வல் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். பாஜக நிர்வாகிகளான பி.ஒய். விஜயேந்திரா, ஷோபா கரந்த்லாஜே, ஆர் அசோகா மற்றும் சிஎன் அஸ்வத் நாராயண் ஆகியோரும் பதிலளிக்குமாறு சிவகுமார் கேட்டுக் கொண்டார்.


அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தேசிய அளவில் பிரச்சினையாகி, பாஜக-ஜனதா தளம்(எஸ்) கூட்டணிக்கு சவாலாக அமையும் என்று காங்கிரஸ் கட்சியினர் கருதுகின்றனர். குமாரசாமியோ அல்லது முன்னாள் அமைச்சர் எச்டி ரேவண்ணாவோ (பிரஜ்வாலின் தந்தை)  சர்ச்சைகள் தொடர்பாக இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.