கேரளாவில் கடந்த சில மாதங்களாக வரதட்சணை கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த மாதம் மட்டும் கேரளாவில் விஸ்மயா,சுசித்ரா உள்ளிட்ட மூன்று இளம் பெண்கள் இந்த வரதட்சணை கொடுமை காரணமாக மரணம் அடைந்தனர். இந்தச் சம்பவங்கள் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவிலேயே அதிக பேர் கல்வி அறிவு கொண்ட மாநிலமாக இருக்கும் கேரளாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  இந்தச் சூழலில் அம்மாநில இளைஞர் ஒருவரின் செயல் மிகவும் நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. 



 



ஆலப்பபுழா மாவட்டத்தின்  நூரநாடு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 28). இவர் ஒரு நாதஸ்வர இசைக்கலைஞர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுருதிக்கும்(21) திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயத்தின் போது தனக்கு வரதட்சணை வேண்டாம் என மணமன் சதீஷ் கூறியிருந்தார்.இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அங்குள்ள ஒரு கோவிலில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. இதற்காக மணப்பெண் சுருதி தனது பெற்றோர் சீதனமாக கொடுத்த 50 பவுன் நகைகளை அணிந்து மணமேடைக்கு வந்தார்.



 

இதை கண்ட மணமகன் சதீஷ், தனது வரதட்சணை வாங்க வேண்டாம் என்ற கொள்கையில் மணப்பெண் அணிந்து இருக்கும் நகையும் சேரும் என்று சுருதியிடம் கூறியுள்ளார். அத்துடன் மணமகள் விருப்பினால் 2 வளையல்களை மட்டும் அணிந்து விட்டு மீதி நகைகளை கழற்றி பெற்றோரிடம் ஒப்படைக்கும்படி சதீஷ் அவரிடம் கூறினார் .இதைத் தொடர்ந்து  தாலி கட்டியவுடன் மணமகள் கழுத்தில் அணிந்து இருந்த நகைகள் அனைத்தையும்  கோவில் பூசாரி மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மணமகள் வீட்டாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

 

சதீஷ் மற்றும் அவருடைய பெற்றோர் ஆகிய அனைவரும் சேர்ந்து இந்த நகைகளை மணமகள் வீட்டினருக்கு திருப்பி கொடுத்துள்ளனர். வரதட்சணை கொடுமை அதிகரித்து வரும் கேரள மாநிலத்தில் இளைஞர் ஒருவர் இப்படி செய்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை பலரும் பாராட்டி வருகின்றனர். வரதட்சணை வேண்டாம் என்று தான் கொண்ட கொள்கையில் இறுதி வரை உறுதியாக இருந்த இந்த இளைஞரின் செயல் மிகவும் பாராட்ட வேண்டிய செயலாக அமைந்துள்ளது. 



 

கேரளாவில் சமீப காலங்களாக நடைபெறும் திருமணங்களில் இந்த வரதட்சணை என்பது மீண்டும் அதிகளவில் தலை தூக்க தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் அதை அடியோடு ஒழிக்க இதுபோன்று அனைத்து இளைஞர்களுக்கும் இறங்கினால் விரைவில் வரதட்சணை கொடுமை என்ற பிரச்னையே இல்லாத சமூகம் விரைவில் நமக்கு கிடைக்கும். அது தான் உண்மையாக ஒரு நல்ல சமூகமாக இருக்க முடியும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இருக்க முடியாது.