உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி, கடந்த 1992-ஆம் ஆண்டு, டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. விஷ்வ இந்து பரிஷத், பாஜக உள்ளிட்டவற்றால் நடத்தப்பட்ட ராம ஜென்மபூமி இயக்கத்தின் கீழ் 'கரசேவகர்களால்' திரட்டப்பட்டு, மசூதி இடிக்கப்பட்டது. 
கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மசூதி இடிக்கப்பட்டது, இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாக பதிவானது.


பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன. அந்த வகையில், கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டம் சன்னப்பேட்டை கிராமத்தில் கலவரத்தை ஏற்படுத்தியது, வன்முறையில் ஈடுபட்டு கடைகளை எரித்தது உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் தீவிர வலதுசாரி ஆதரவாளரான ஸ்ரீகாந்த் பூஜாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து நடந்த கலவரங்கள்:


கடந்த 31 ஆண்டுகளில், பூஜாரி மீது  16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலவரம் மற்றும் காயம் ஏற்படுத்தியதாக அவர் மீது மொத்தம் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 1991 ஆம் ஆண்டை தவிர, 1999, 2001 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் கலவரத்தில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.


கலவரம் நடந்து 30 ஆண்டுகள் ஆன நிலையில், சமீபத்தில்தான் பூஜாரி கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, கர்நாடக முழுவதும் பாஜகவினர் போராட்டம் மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, கலவர வழக்கில் பிணை கோரி பூஜாரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஹூப்ளி மாவட்ட நீதிமன்றம், அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது.


பூஜாரிக்கு பிணை வழங்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தரப்பு வழக்கறிஞர் சஞ்சீவ் பாட்ஷாக், "நீதிமன்ற உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம். நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. உத்தரவு நகலை இன்னும் பார்க்கப்படவில்லை. பூஜாரி, நாளை மாலை சிறையில் இருந்து வெளியே வருவார்" என்றார்.


குற்றம்சாட்டப்பட்ட பூஜாரிக்கு பிணை: 


கலவர வழக்கை தவிர, சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் சட்ட விரோதமாக மதுபானத்தை விற்றதாகவும் பூஜாரி மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அவர் ஒருபோதும் நீதிமன்றத்தில் ஆஜராகியதில்லை என்றும் ஹூப்பள்ளி போலீசார் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே, அவர் ஆட்டோரிக்சா ஓட்டுநராக பணியாற்றி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


அயோத்தி விவகாரம் தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. அயோத்தியில் மசூதி இருந்த நிலமானது, பகவான் ராம் லல்லாவுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியது. இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 30, 2020 அன்று, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பை அறிவித்தது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுவித்தது. செய்தித்தாளில் வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோ கிளிப்களை ஆதாரமாக நம்ப வழக்கின் நீதிபதி மறுத்துவிட்டார்.