கர்நாடகாவில் பாஜக அலுவலகத்தில் புகுந்த நல்ல பாம்பை அதிகாரிகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.


பாஜக அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பு


கர்நாடக மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனது சொந்த தொகுதியான சிக்கோனில் உள்ள பாஜக  முகாம் அலுவலகத்திற்கு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சென்றார். அப்போது பாஜக முகாம் அலுவலகத்தில் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்து அங்கிருந்த தொண்டர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். முதலமைச்சர் முன்னிலையில் அதிகாரிகள் நல்ல பாம்பை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.



கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை


224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவியது. மொத்தமாக 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.


கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. மாநிலம் முழுவதும் உள்ள 36 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.