ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை என்றும் எதற்காக எங்களை வகுப்புகளுக்கு அனுமதிப்பில்லை? என கர்நாடக மாநிலம் உடுப்பி இஸ்லாமிய கல்லூரி மாணவிகள் குரல் எழுப்பியுள்ளனர்.


கல்லூரிகளில் சமீப காலங்களாக மத ரீதியான பிரச்சனைகள் அதிகளவில் எழ ஆரம்பிக்கிறது. குறிப்பாக இஸ்லாமிய கல்லூரி மாணவிகளின் ஹிஜாப்  எனப்படும் முழு அளவில் உடலை மறைக்கும் ஆடையை அணியும் விஷயங்கள் தான் ஹாட் டாப்பிக்காக மாறிவருகிறது. இதுப்போன்ற ஒரு நிகழ்வு தான் கர்நாடக மாநிலம் உடுப்பில் இருக்கும் அரசு பியு கல்லூரியில் கடந்த 3 வார காலமாக அரங்கேறிவருகிறது. இக்கல்லூரியில்  இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதோடு கல்லூரிகளில் வகுப்புகளிலும் அவர்களை அனுமதிக்கவில்லை.


இதனையடுத்து, “ எங்கள் உரிமையை ஏன் மறுக்கிறீர்கள்? நாங்கள் எங்களது உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்று  தங்களது போராட்டக்குரலை உயர்த்தியுள்ளனர். இதனால் அங்கு போலீசார் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவில் இருக்கும் பெரும்பாலான கல்லூரிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருவதோடு இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது.



இப்பிரச்சனைக்குறித்து இஸ்லாமிய மாணவிகள் தெரிவிக்கையில், நாங்கள் எங்களது உரிமையை கடைப்பிடிக்கிறோம் ஆனால் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாது என எங்களை மிரட்டுகின்றனர். மேலும் இங்க அதிக ஆண் ஆசிரியர்கள் இருக்கிறார்கள், கல்லூரிக்கு வெளியில் இருந்து பலர் வருவதால் தான் நாங்கள் ஹிஜாப் அணிகிறோம் என்று மாணவிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் நாங்கள் வகுப்புகளுக்கு சென்றிருந்தாலும் எங்களுக்கு ஆப்சன்ட் தான் போடுகிறார்கள். என்ன இருந்தாலும் எங்களது உரிமையை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்.


இதற்கு பதிலளிக்கும் விதமாக கல்லூரியின் முதல்வர் ருத்ரா கவுடா தரப்பினர் தெரிவிக்கையில், தற்போது கல்லூரியில் பிரச்சனையை எழுப்பும் மாணவர்கள் சிஎப்ஐ என்ற இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் வேண்டும் என்றே பிரச்சனையை எழுப்புகிறார்கள் என்று புகார் தெரிவிக்கிறார். இதோடு இக்கல்லூரியில் பல சிறுபான்மை மாணவர்கள் படிக்கும் வேளையில் இவர்கள் மட்டும் தேவையில்லாத பிரச்சனையை  எழுப்புகின்றனர். மேலும் கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களும்  கல்லூரியின் விதியை மதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தான் கல்லூரியின் புதிய விதி என்றும் கூறியுள்ளனர். 



இப்பிரச்சனைக்குறித்து இதுவரை மாணவ அமைப்பினர் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எவ்வித உடன்பாடும் எட்டவில்லை. மாணவிகள் எங்களது உரிமையை நாங்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்ற ஒருமித்த குரலுடன் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த சூழலில் தான் கர்நாடகவில் பல்வேறு இஸ்லாமிய கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரச்சனைக்குரிய அரசு பியு கல்லூரியின் புதிய விதியின் படி,  மாணவ, மாணவியர் ஹிஜாப், காவி துண்டு அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மத உரிமையை பின்பற்றுவதில் என்ன தவறு இருக்கிறது? என்பது போன்ற கருத்துக்களையும் சமூக ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர்.