2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.


மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு 2016  ஆம் ஆண்டு நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். ஒட்டுமொத்த நாட்டையே அதிர வைத்த அந்த அறிவிப்புக்கு பிறகு, புதிய 500 ரூபாய் நோட்டுகளையும், 1000 ரூபாய்க்கு பதிலாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. 


இந்த நிலையில், மே மாதம் 19-ஆம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்கு பிறகு புழக்கத்தில் உள்ள ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்றும், வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவிப்பை வெளியிட்டது. 2019-ஆம் ஆண்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை பெருவாரியாக மத்திய அரசு நிறுத்திவிட்டதாலும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் பெருமளவில் குறைந்துவிட்டது. கடந்த ஆகஸ்ட் 31-ந் தேதி நிலவரப்படி, இதுவரை 3.32 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 ஆம் தேதி அதாவது இன்றுடன் முடிவடைகிறது. 2000 ரூபாய் நோட்டை வேறு நோட்டுகளாக மாற்றுவதில், தொடக்கத்தில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. மே 23, 2023 முதல், ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றில் தனிநபர்கள் 2000 ரூபாய் நோட்டை மற்ற பணத்துடன் மாற்றிக்கொள்ளலாம்.


இந்த நோட்டுகளை மாற்ற 20 ஆயிரம் ரூபாய் வரை வரம்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. அதாவது ஒருவர், ஒரு நாளைக்கு, 10 நோட்டுகள் வரை மாற்றிக்கொள்ளலாம். மேலும், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு, கட்டுப்பாடுகளுடன், எந்த ஆவணங்களும் தேவையில்லை. அதாவது, 20 ஆயிரம் ரூபாய் வரையில் எந்தவித ஆவணங்களும் இன்றி, பயனாளர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோயில் உண்டியல்களில் அதிகளவு 2000 ரூபாய் நோட்டுகள் இருக்கும் என்பதால் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் உண்டியலில் இருக்கும் காணிக்கையை எண்ணி அதில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை மற்ற வங்கிகளை அனுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் பழனி கோயிலில் இருக்கும் உண்டியலில் பணம் எண்ணியதில் 5 கோடி இருந்துள்ளதாகவும், அதனை மாற்றும் பணிகளில் கோயில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்றுடன் கெடு முடிவதால் பெட்ரோல் பங்கில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கும் பணிகள் முற்றிலுமாக நின்றுவிட்டதாக பெட்ரோல் பங் உரிமையாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறும் போது, போதிய அவகாசத்தை மத்திய அரசு வழங்கியுள்ளதால் அனைவரும் தங்களிடம் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றிவிட்டதாகவும் தற்போது டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்குவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.  இன்று காலக்கெடு முடிவடையும் நிலையில் இந்த அவகாசம் நீடிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.  


Karnataka Bandh: காவிரி நீர் விவகாரம்: கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்: 430 தமிழக பேருந்துகள் நிறுத்தம்..


Siddharth: காவிரி விவகாரம்.. சித்தார்த்திடம் பிரச்னை செய்த கன்னட அமைப்பினர்.. மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ்..!