கடந்த 5 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களின் தற்கொலை வழக்குகளை முதன்மையான ஐஐடிகள் பதிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சகம் புதன்கிழமை மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.


ஐஐடியில் இருந்து 39 பேர்


2018 மற்றும் 2023 க்கு இடையில் ஐஐடி, என்ஐடி, ஐஐஎம் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் (யுஜிசியின் கீழ்) 98 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார், நாடாளுமன்றத்தின் மேலவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.


இதில், 39 மாணவர்கள் வெவ்வேறு ஐஐடிகளில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதைத் தொடர்ந்து 25 பேரின் தற்கொலைகள் என்ஐடியில் இருந்தும், மத்திய நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்களிலும் இருந்தும் நிகழ்ந்துள்ளன. அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) 2019 முதல் இன்று வரை இதுபோன்ற 13 இறப்புகள் பதிவாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


2018-2023 வரையிலான மாணவர் தற்கொலை வழக்குகள்


ஐஐடிகள்: 39


என்ஐடிகள்: 25


மத்திய பல்கலைக்கழகங்கள் (பல்கலைக்கழக மானியக் குழுவின் கீழ்): 25


இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்: 2


இந்திய மேலாண்மை நிறுவனங்கள்: 4


இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள்: 3


AIIMS (2019 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை): 13



ஆண்டுவாரியாக பதிவான தற்கொலைகள்


7 மாதங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ள இந்த ஆண்டில், ஏற்கனவே உயர் கல்வி நிறுவனங்களில் 20 மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 2022 இல் மொத்தமாக 24 இறப்புகள் பதிவாகியுள்ளன. 2021 மற்றும் 2020 இல் தலா ஏழு தற்கொலைகள் பதிவாகியுள்ளன. 2019 இல், 19 மாணவர் தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன.


அதே நேரத்தில் 2018-ல் 21 இறப்புகள் நிகழ்ந்தன என்று தரவுகள் கூறுகின்றன. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கோவிட் லாக்டவுன் மற்றும் வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்டதால் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. அதனால் அந்த ஆண்டுகளில் தற்கொலைகள் குறைந்தன. 2022 இல் பெரும்பாலான வளாகங்கள் திறக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதிகரித்திருப்பதை காண முடிகிறது. 


தொடர்புடைய செய்திகள்: ADR Report: இந்தியாவில் எந்த எம்.எல்.ஏ.வுக்கு எவ்வளவு சொத்து? - வெளியானது பட்டியல் - ஆய்வறிக்கையில் அதிர்ச்சி!


கோவிட் காரணமா?


இந்த ஆண்டு, சென்னை ஐஐடி- யில் கடந்த ஆறு மாதங்களில் ஐந்து மாணவர்களின் தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இயக்குனர் பேராசிரியர் வி காமகோடி, சமீபத்தில் அளித்த பேட்டியில், இரண்டு வருடங்களாக மாணவர் மற்றும் ஆசிரியர்களின் தொடர்புகளை சீர்குலைத்த தொற்றுநோய்தான் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இத்தகைய தீவிர முடிவுகளை எடுப்பதற்கு முக்கிய காரணம் என்று கூறினார்.


2022-23 ஆம் ஆண்டில் வளாகங்கள் திறக்கப்பட்டவுடன், மாணவர்கள் வகுப்புகளுக்குத் திரும்பியபோது, அதற்கு பழகுவதில் சிரமம் ஏற்பட்டபோது இந்த பெரிய இடைவெளியின் விளைவுகள் உணரப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.


இதற்கிடையே "கற்றலில் மன அழுத்தம், குடும்ப காரணங்கள், தனிப்பட்ட காரணங்கள், மனநலப் பிரச்சினைகள் போன்றவை இத்தகைய தற்கொலை நிகழ்வுகளுக்கு சில காரணங்கள்" என்று பாராளுமன்றத்தில் தனது பதிலில் சுபாஸ் சர்க்கார் கூறினார்.



ஒடுக்கப்பட்ட பிரிவினர் அதிகம்


இந்த நிறுவனங்களில் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களில், ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகம் என்று செய்தி வெளியிட்டது. ஐஐடிகளில் 70 சதவீத இடங்கள் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கானவை. இதில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவுகள் (EWS) மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கான ஒதுக்கீடும் அடங்கும்.


2021 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் பகிரப்பட்ட அரசாங்கத் தரவுகளின்படி, மத்திய அரசின் நிதியுதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து (ஐஐடிகள், என்ஐடிகள், மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐஎம்கள் உட்பட) மொத்தம் 122 மாணவர்கள், 2014 முதல் 2021 க்குள் தற்கொலை செய்துகொண்டனர் என்று கூறப்பட்டுள்ளது. இவர்களில் 58 சதவீத மாணவர்கள் SC/ST/OBC பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்த தற்கொலைகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மூலம், அமைப்பை மேலும் வலுவாக மாற்றுமாறு கல்வி அமைச்சகம் அந்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்க்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050