முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் எஸ்.வெங்கிடரமணன் இன்று காலமானார். அவருக்கு வயது 92. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான அவர், வயது மூப்பு காரணமாக சென்னையில் மரணம் அடைந்தார். தமிழ்நாட்டின் முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் தந்தையான வெங்கிடரமணன், கடந்த 1931ஆம் ஆண்டு நாகர்கோவிலில் பிறந்தார்.


கேரளாவின் திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்ற, வெங்கிடரமணன், பின்னர் அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் உள்ள கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் தொழில்துறை நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.   


அரசில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர் வெங்கிடரமணன்:


அந்த காலக்கட்டத்தில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக நாகர்கோவில் இருந்தது. பல்வேறு உயர் பதவிகளை வகித்து வந்த வெங்கிடரமணன், கடந்த 1990ஆம் ஆண்டு முதல் 1992ஆம் ஆண்டு வரை, ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தார். இவர், ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவி வகித்த காலத்தில் இந்தியா, பொருளாதார ரீதியாக பல சவால்களை சந்தித்தது.


1990களில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களுக்கான பணத்தை கூட திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருந்தது இந்தியா. கடுமையான பொருளாதார நெருக்கடி, ஹர்ஷத் மேத்தா முறைகேடு என பல சவால்களை சந்தித்து கொண்டிருந்தபோது, ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவி வகித்தவர் வெங்கிடரமணன்.


இக்கட்டான சூழலில் மற்ற நாட்டு மத்திய வங்கிகளிடமும் சர்வதேச நிதி நிறுவனங்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வெளிநாட்டு நிதியை பெருக்குவதில் முக்கிய பங்காற்றினார் வெங்கிடரமணன்.                                                                                                    


கர்நாடக அரசின் ஆலோசகர்:


பொருளாதாரத்தில் எந்த பட்டமும் பெறாத சூழலிலும், கடன் சுமை மற்றும் அதற்கான தீர்வு குறித்து நன்கு அறிந்திருந்த காரணத்தால், சந்திரசேகர் அரசால் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டவர் வெங்கிடரமணன். கடந்த 1985ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை, இந்திய அரசின் நிதித்துறை செயலாளராகவும், ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு கர்நாடக அரசின் ஆலோசகராகவும் பதவி வகித்தார்.


இதையும் படிக்க: Special Train: எகிறிய விமான கட்டணங்கள்: உலகக்கோப்பைக்காக சிறப்பு ரயில்கள் - மேளதாளத்துடன் வரவேற்பு