கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், ஆர்எஸ்எஸ் தலைவரை சந்தித்தது ஏன்? என கேட்டதற்கு 1986 ஆம் ஆண்டு முதல் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்துடன் (ஆர்எஸ்எஸ்) தனக்கு இருந்த நெருங்கிய தொடர்பை நினைவு கூர்ந்த சம்பவம் கேரள மாநிலத்தில் கடும் எதிர்ப்புகளை கிளப்பி உள்ளது.


ஆர்.எஸ்.எஸ் தலைவரை சந்தித்தது தவறா?


நாட்டில் உள்ள பல்வேறு ராஜ்பவன்களில் வெளிப்படையாகவும் அதிகாரப்பூர்வமாகவும் ஆர்எஸ்எஸ் உடன் இணைந்தவர்கள், இருப்பதாக ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கூட சுயம்சேவகர் என்று கூறிய அவர், ஒருமுறை ஜவஹர்லால் நேரு கூட ஆர்எஸ்எஸ் அமைப்பை குடியரசு தின அணிவகுப்புக்கு அழைத்துள்ளார், எனவே நான் இப்போது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்ததில் என்ன பிரச்சனை? என்று பேசியுள்ளார்.


ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ​​சமீபத்தில் திருச்சூருக்கு வந்தபோது அவரை சந்தித்து ஏன் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்ட அமைப்பா?" என்று அவர் கேட்டார். 2019 ஆம் ஆண்டு கண்ணூர் பல்கலைக்கழக நிகழ்வில் தனக்கும், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் இடையே நடந்த கடிதங்கள் மற்றும் கடிதங்கள் தொடர்பான காணொளி காட்சியை வெளியிட நேற்று முன்தினம் ராஜ்பவனில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் ஆர்எஸ்எஸ் உடன் தனக்கு சமீபத்தில் ஒன்றும் தொடர்பு ஏற்படவில்லை, 1986 ஆம் ஆண்டு ஷா பானோ வழக்கில் ஆர்எஸ்எஸ் தன்னை ஆதரித்தபொழுதில் இருந்தே ஆர்எஸ்எஸ் உடனான உறவு தொடங்கியது என்று கூறினார்.



ஷா பானோ வழக்கு


இவர் 1986 இல் ராஜீவ் காந்தி அரசாங்கத்தில் மாநில அமைச்சராக இருந்தவர், ஆனால் ஷா பானோ வழக்கில் அரசாங்கத்தின் எதிரான நிலைப்பாட்டிற்காக அவர் ராஜினாமா செய்தார். ஷா பானோ இந்தூரைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் பெண் ஆவார். 1978 இல் விவாகரத்து பெற்ற அவர், கிரிமினல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்து தனது கணவரிடமிருந்து ஜீவனாம்ச உரிமையைப் பெற்றார். அவரது கணவர், கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார், ஆனால் உச்சநீதிமன்றமும் கீழ் நீதிமன்றத்தின் உத்தரவையே உறுதி செய்தது. அன்றைய ராஜீவ் காந்தி அரசு, இந்தத் தீர்ப்பை மாற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் 1986-ம் ஆண்டு முஸ்லீம் பெண்கள் (விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு) மசோதாவைக் கொண்டு வந்தது.


தொடர்புடைய செய்திகள்: மன்னிப்பு கேட்கத்தயாரா இருக்கேன்.. ஆனா எதுக்குடா மன்னிப்பு கேட்கணும்? - கொந்தளித்த ஆ.ராசா


என்னை ஆதரித்தது ஆர்எஸ்எஸ் 


1973-ம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125-வது பிரிவின் கீழ், முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தனது முன்னாள் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கோர உரிமை உண்டு என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவைக் கொண்டுவருவதற்கான ராஜீவ் அரசாங்கத்தின் முடிவை ஆரிப் முகமது கான் வெளிப்படையாக எதிர்த்தார். சாதி அல்லது மதம் பாராமல் அனைத்து குடிமக்களும், ஆர்.எஸ்.எஸ் உடன், கேரளத்தின் முதல் முதலமைச்சரான ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் உட்பட அனைவரும் அப்போது அவருக்கு ஆதரவளித்தனர். நம்பூதிரிபாட்டிற்குப் பிறகு இடதுசாரிகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர். தனிநபர் சட்ட வாரியத்தின் ஆதரவாளர்களாக மாறினர். ஆர்.எஸ்.எஸ்., தொடர்ந்து எனக்கு ஆதரவளித்தது. இடதுசாரிகள் கூட 1991 வரைதான் ஆதரித்தனர். 



தொடரும் மோதல் போக்கு


கடந்த 17 ஆம் தேதி ஆரிப் முகமது கான் திருச்சூரில் இருந்தபோது, ​​பகவத் அங்கு இருப்பதை அறிந்ததாகவும், அதனால், அவரைச் சந்தித்து நலம் விசாரிக்கச் சென்றதாகவும் கான் கூறினார். அவர் மீண்டும் அங்கு வந்தால், நான் மீண்டும் அவரைச் சென்று சந்திப்பேன், என்று ஆரிப் முகமது கான் மேலும் கூறினார். "இந்தியாவில் தோன்றாத ஒரு சித்தாந்தத்திற்கு விசுவாசமாக இருக்க உங்களுக்கு உரிமை இருந்தால், ஆர்எஸ்எஸ் உடன் நட்பு கொள்ள எனக்கு உரிமை இல்லையா? சித்தாந்தம் பிரச்சனையல்ல. பிரச்சனை என்பது அந்த சித்தாந்தத்தில் இருந்து உருவான செயல்" என்று அவர் கூறினார். கண்ணூரில் நடந்த கொலைகளைப் பற்றிக் குறிப்பிட்ட கான், அது நடக்காமல் தடுப்பது யாருடைய பொறுப்பு என்று கேட்டார்.


கவர்னருக்கும், மாநில அரசுக்கும் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக மோதல் நடந்து வருகிறது. லோக்-ஆயுக்தா சட்ட திருத்தம், பல்கலைக்கழக வேந்தரான கவர்னரின் அதிகாரத்தை குறைத்தல் ஆகியவை தொடர்பான அவசர சட்டங்களுக்கு கவர்னர் கையெழுத்திட மறுத்து விட்ட நிலையில் அந்த அவசர சட்டங்கள் காலாவதி ஆகிவிட்டன. இதனை தொடர்ந்து, சட்டசபையில் கடந்த 30 மற்றும் 1 ஆம் தேதிகளில் லோக் ஆயுக்தா திருத்த மசோதா, பல்கலைக்கழகங்களில் கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா ஆகியவை காங்கிரஸ் உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டன. ஆனால் அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்று கவர்னர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண