மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள் மிரட்டப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவர்கள் பலருக்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


எதிர்க்கட்சி தலைவர்களை தட்டி தூக்கும் ED: 


அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். கடந்த சில மாதங்களாகவே, அவர் கைது செய்யப்படுவார் என தகவல் வெளியாகி வந்தது. இப்படிப்பட்ட சூழலில், கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.


கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை கைது செய்ய அமலாக்கத்துறை முற்பட்டது. இதையடுத்து, தனது முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகிய நிலையில், சோரன் கைது செய்யப்பட்டார்.  


ஏற்கனவே, காங்கிரஸ் மூத்த தலைவரும் சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சருமான பூபேஷ் பாகல், அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் உள்ளார். இவரை தவிர, பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் உள்ளனர்.


சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறை:


தேர்தல் நெருங்கும் சூழலில், எதிர்க்கட்சி தலைவர்களை முடக்கும் நோக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருப்பதாக புகார் எழுந்த நிலையில், தெலங்கானா முன்னாள் முதலமைச்சரும் பாரத் ராஷ்டிர சமிதி தலைவருமான கே. சந்திரசேகர் ராவின் மகள் கவிதா கைது செய்யப்பட்டார்.


ஆம் ஆத்மி கட்சியில் மட்டும் நான்கு முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கெஜ்ரிவாலை தவிர, டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


2004ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை ஒப்பிடுகையில்  கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்வது நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.


கடந்த 2014லிருந்து 2022க்கு இடைப்பட்ட காலத்தில் 121 முக்கிய அரசியல் தலைவர்கள் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளனர். அவர்களில் 115  பேர் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, சிலருக்கு எதிராக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறையாக கடந்த 2 மாதங்களில் 2 முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டிருப்பது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது.


இதையும் படிக்க: Kejriwal Arrest: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது.. தேசிய அரசியலில் பரபரப்பு!