தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.நீட் ரத்து, புதிய கல்விக்கொள்கையைத் திரும்பப் பெறுதல், இடஒதுக்கீட்டில் மாநிலத்துக்கான முழு உரிமை என ’உரிமைக்குக் குரல் கொடுப்போம்’, என பிரதமர் மோடியிடம் அவர் முன்வைத்த கோரிக்கைகள் இது தமிழகமல்ல, தமிழ்நாடு என்பதை மத்திய அரசுக்கு நினைவூட்டும் பேரிகைகளாகவே இருந்தன.
பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சிக்கு இந்த எதிர்க்குரல்கள் புதிதல்ல. இந்தியா ஒன்றிய அரசு என்பதை மத்திய ஆட்சிக்கு நினைவூட்டும் வகையிலேயே இந்தக் குரல்கள் இருந்துவருகின்றன. சிறுவணிகங்களுக்கான கடன் திரும்பச் செலுத்தும் காலத்தை மத்திய அரசை நீட்டிக்கக் கோருவது தொடர்பாக 12 மாநில முதல்வர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதியது, மத்திய ஆட்சியின் கொடுங்கோன்மையை எதிர்கொள்ள மாநில அரசுகள் கூட்டணியாக இயங்கவேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியது, மாநிலங்களுடன் சண்டை பிடிக்காத அவர்களைத் துன்புறுத்தாத மத்திய அரசை மக்கள் பார்க்க விரும்புகிறார்கள் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்தது.
இந்தியாவின் ஆற்றல்மிக்க பிரதமர் நரேந்திர மோடி என்றால் அவருக்குச் சரிநிகரான ஆற்றலுடன் இந்திய மாநிலங்களின் குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. நாடாளுமன்றம்தான் நாடு என நிறுவும் மத்திய அரசிடம் பிராந்திய அடையாளம் மற்றும் உள்மாநில அரசியலை நினைவூட்டும் பிரதிநிதித்துவமாக இந்த மாநில முதலமைச்சர்கள் இருக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சியின் பி.எஸ்.எடியூரப்பா ஆளும் கர்நாடக மாநிலம் கூட இந்த மாநில அதிகார அரசியலுக்கு விதிவிலக்கல்ல.
இதுபோன்ற மத்திய மாநில அரசுகளின் மோதல் போக்குக்குத் தீர்வாக மாநிலங்களின் நிதித்தேவை மற்றும் பிற உரிமைகளைப் பூர்த்தி செய்ய மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இயங்கும் நிதி ஆயோக் அல்லாத தன்னாட்சித் திறன் கொண்ட புதிய நிர்வாக இயந்திரம் காலத்தின் தேவை. ’உறவுக்குக் கைகொடுப்போம், உரிமைக்குக் குரல்கொடுப்போம்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது தமிழ்நாட்டின் குரல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மாநிலங்களின் குரல் என்பதை ஒன்றியம் உணர்த்துகிறதா? Also Read: இந்தியாவை திரும்பிப் பார்க்கவைத்த பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் யார்? என்ன செய்தார்கள்?