Breaking LIVE: திருவாரூரில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

Breaking Live : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் அடுத்த 24 மணிநேரத்தில் நடைபெற இருக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள..

முகேஷ் Last Updated: 04 Aug 2022 01:23 PM
தமிழ்நாடு ஆளுநர் நாளை டெல்லி பயணம்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நாளை டெல்லி செல்கிறார். நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க இருப்பதாக தகவல்.

இலங்கை போராட்டாம்- பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை!

இலங்கை காலி திடலில் போராடி வரும் பொதுமக்கள் நாளை மாலை 5 மணிக்குள் வெளியேறாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking LIVE: அ.இ.அ.தி.மு.க. அலுவலக சாவி- ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியதன் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

சினிமா தயாரிப்பாளர்கள் வீடுகளில் மூன்றாவது நாளாக தொடரும் ஐ.டி. ரெய்டு!

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தொடர்புடைய இடங்களிலும்,தியாகராய நகரில் தாயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சினிமா தயாரிப்பாளர்கள் வீடுகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக  சோதனை நடைபெற்று வருகிறது.

இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் ஒரே நாளில் 19,893 பேருக்கு கொரோனா!

இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் 19,893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,36,478 ஆக உள்ளது. 

திருவாரூரில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

திருவாரூரில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

சேலத்தில் காவேரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை!

தொடர் கனமழை காரணமாக சேலத்தில் காவேரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

பெண் கடத்தப்பட்ட வழக்கில் 19 பேர் மீது வழக்கு - 7 பேர் கைது

மயிலாடுதுறையில் இருந்து இளம்பெண் காரில் கடத்திச் செல்லப்பட்டு விக்கிரவாண்டியில் மீட்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 12 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை உள்ளுர் விடுமுறை!

பிரசித்தி பெற்ற தூயபனிமய மாதா ஆலயத்தின் 440வது ஆண்டு திருவிழாவின் 10ம் நாளை முன்னிட்டு நாளை (05-08-22) தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிப்பு

கொடைக்கானலில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் சிறுமலை பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சிறுமலை பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு.

கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!

தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (4.8.2022) விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Background

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது.  கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில்  கடந்த 2021 ஆம் ஆண்டு  நவம்பர் 4 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43 க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் இதன் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


கிட்டதட்ட 137 நாட்களுக்குப் பின் மார்ச் 22 ஆம் தேதி அன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உயர்ந்து ரூ.110ஐ எட்டியது. இதனால் அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன் விலையை குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைத்தார். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி முதல் மாற்றம் கண்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. 


இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 75வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று ( ஆகஸ்ட் 4) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது. தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.