உத்திரபிரதேச மாநிலத்தில்  இரண்டு அரசு தொடக்க பள்ளிகளில் மதிய உணவு சாப்பிட்ட 40 குழந்தைகள் 
உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கோரக்பூர் மாவட்டம் சராய் குல்ஹரியா மற்றும் பலாபர் கிராமத்தில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு, பூச்சி மற்றும் புழுவுடன் கூடிய மதிய உணவை சாப்பிட்டடதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் சார்காவனில் உள்ள சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அந்த மாணவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என கூறப்படுகிறது. 


இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் பள்ளிக்கு விரைந்து சென்று இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை விரைந்து கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். சார்கவன் பிளாக்கில் உள்ள 70 தொடக்க பள்ளிக்கள் மற்றும் ஜூனியர் உயர் நிலைப்பள்ளிகளுக்கு அக்‌ஷ்ய பத்ரா என்ற நிறுவனம் உணவு சப்ளை செய்வதாக கல்வி அதிகாரி தெரிவித்தார். சராய் குல்ஹரியாவில் உள்ள பள்ளியின் உதவி ஆசிரியர் சந்தோஷ் மிஸ்ரா பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவு அக்‌ஷய் பத்ரா நிறுவனத்தால் வழங்கப்பட்டது என்பதை உறுதி செய்ததாக கூறப்படுகிறது. 


கடந்த சனிக்கிழமை மாணவர்களுக்கு, ராஜ்மா உருளைக்கிழங்கு தயிர் மற்றும் சாதம் சத்துணவாக வழங்கப்பட்டுள்ளது. அந்த உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு சிறிது நேரத்திலேயே வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இது தொடர்பாக கிராம தலைவர் மற்றும் கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குல்ஹரியா கிராம தலைவர் சுமித் சாஹினி பாதிக்கப்பட்ட குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்தார். பின்னர் குழந்தைகள் சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.


மேலும் படிக்க,


TN Govt Reward: விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் ரூ.10,000 - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு


150 மோமோஸ்களை ஒரே நேரத்தில் சாப்பிடும் சவால்... சோகத்தில் முடிந்த சேலஞ்... என்ன நடந்தது?