தருமபுரி மாவட்டத்தில் அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் ஆகிய வனச் சரகங்கள் உள்ளது. இதில் யானை, புள்ளிமான், மயில், காட்டுப் பன்றி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இந்நிலையில், வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி, கிராமங்களுக்கு நுழைவது அடிக்கடி நிகழ்கிறது‌. இதனால் வனப் பகுதியை ஒட்டியுள்ள விவசாயிகள் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதி தமிழக கர்நாடக வனப் பகுதிகளை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது. கோடை காலங்களில் தண்ணீர், உணவு தேடி வனப் பகுதியை விட்டு, ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு அவ்வப்போது யானைகள் வருவது வழக்கம். தற்போது கர்நாடக மாநில வனப் பகுதியில் வறட்சி நிலவுவதால், அங்கு உள்ள யானைகள் கூட்டம் கூட்டமாக உணவு, தண்ணீரை தேடி கர்நாடக தமிழக எல்லைப் பகுதியான தேன்கனிக்கோட்டை, ஓசூர், சானமாவு பகுதியில் சுற்றித் திரிகின்றன. இந்த யானைகள் வனப் பகுதியிலேயே தருமபுரி மாவட்ட வனப் பகுதிக்குள் நுழைந்து விடுகிறது. அவ்வாறு வரும் யானைகள், அந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை உண்டும், கால்களால் மிதித்து அழித்து வருகிறது.




 

இந்த யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் போக்கு காட்டிவிட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றி திரிகின்றன. இதில் 20க்கும் மேற்பட்ட யானைகள் ஒகேனக்கல் வனப் பகுதியில் நுழைந்தது. தற்போது இந்த யானை கூட்டம் ஒகேனக்கல் ஆலம்பாடி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த நிலையில்  யானைகள் வனப் பகுதி சாலை ஓரங்களில் உள்ள மரங்களின் கிளைகளை உடைத்தும், இலைகளை தின்று வருகின்றது. காலை, மாலை நேரங்களில் ஒகேனக்கல் அஞ்செட்டி சாலையை கடந்து செல்கின்றன. இந்த நிலையில் 20க்கும் மேற்பட்ட யானைகள் 5 குட்டிகளுடன் சாலையை கடந்து காவிரி ஆற்றின் கரைக்குச் சென்று, குட்டிகளுடன் யானைகள் கூட்டம் கூட்டமாக தண்ணீர் குடித்து உற்சாகமாக குளியல் போட்டு விட்டு செல்கிறது. அதன் பின்னர் யானைகள் கூட்டமாக மீண்டும் வனப் பகுதிக்கு திரும்பி செல்கிறது. இதனால் கூட்டம் கூட்டமாக வரும் யானைகளை சாலையில் செல்பவர்கள் கண்டு ரசித்து, புகைப்படங்கள் எடுத்து செல்கின்றனர். மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக இருப்பதால், யானைகள் வெளியில் வர வாய்ப்புள்ளது. இதனால் வனத் துறையினர் யானைகளை தொடர்ந்து கண்காணித்து, வெளியில் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.