கோவையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 97 ஆயிரத்து 306 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், 909 பேர் உயிழந்துள்ளனர். மே மாதம் இரண்டாவது வாரத்தில் ஏறுமுகத்தில் இருந்த தொற்று பாதிப்புகள், ஜீன் மாதம் இரண்டாவது வாரத்தில் இறங்கு முகத்தில் உள்ளன.


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமாக சென்னை உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் கோவை உள்ளது. அதேசமயம் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் சென்னையை விட கோவையில் அதிகமாக பதிவாகி வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் கோவை முதலிடத்தில் நீடித்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. அதேசமயம் கோவையில் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.




கோவை மாவட்டத்தில் நேற்று 1895 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. நேற்று முன் தினம் 1982 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று முன் தினத்தை விட நேற்று 87 பேருக்கு குறைவாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து  3 ஆயிரத்து 140 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 17 ஆயிரத்து 617 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது.


நேற்று கொரோனா தொற்றில் இருந்து 2534 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்  குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 91 ஆயிரத்து 565 பேராக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா தொற்றால் நேற்று 19 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1733 ஆக உயர்ந்துள்ளது.


ஒரு மாத ஒப்பீடு


கடந்த மே 13 ம் தேதியுடன் ஒப்பீடுகையில், ஜீன் 13 ம் தேதியின் கொரோனா பாதிப்புகள் நிலவரம் ஆறுதலை தருவதாக அமைந்துள்ளது. மே இரண்டாவது வாரத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்ததோடு, ஆக்சிஜன் படுக்கைகளுக்கான தட்டுப்பாடுகள் நிலவியது. மே 13 ம் தேதி அன்று 2835 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டன. அன்று மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 834 பேராக இருந்த நிலையில், தற்போது இரண்டு இலட்சத்து 3 ஆயிரத்து 140 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கடந்த ஒரே மாதத்தில் 97 ஆயிரத்து 306 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.




மே 13 ம் தேதி 1832 ஆக இருந்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, தற்போது 2534 ஆக உயர்ந்துள்ளது. அன்று 90836 ஆக இருந்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை, தற்போது ஒரு இலட்சத்து 565 பேராக அதிகரித்துள்ளது. அன்று 13 ஆக இருந்த உயிரிழப்புகள், ஜீன் 13 ம் தேதி 19 ஆக உள்ளது. அன்று 824 ஆக இருந்த உயிரிழப்புகள், தற்போது 1733 ஆக உள்ளது. இதனால் ஒரே மாதத்தில் 909 பேர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.


மே மாதத்தில் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த கொரோனா தொற்று பாதிப்புகள், மே 27 ம் தேதி இதுவரை இல்லாத வகையில் உச்ச பாதிப்பாக 4734 ஆக பதிவானது. அதன்பின்னர் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது கொரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ந்து இறங்குமுகத்தில் உள்ளது. இதனால் மருத்துவமனைகள் மெல்ல மெல்ல படுக்கைகள் காலியாக வருகின்றன. கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.


 


மேலும் படிக்க: கிஷோர் கே சாமி கைது: ஜனநாயகத்தின் மீது தாக்குதல் என பாஜகவினர் கண்டனம்!