கோவை மாநகரப் பகுதிகளில் தொடர் கோடை மழை கொட்டித் தீர்த்து வருவதால், வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது.


கடந்த இரண்டு மாதங்களாக கோடை காலம் என்பதால் தமிழ்நாடு முழுவதும் கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. நீர் நிலைகள் வறண்டு காணப்பட்டது.  மழை இல்லாததால் கடுமையான வறட்சி நிலவி வந்தது. கோவை மாவட்டத்திலும் கோடை வெயில் அதிகரித்து காணப்பட்டது. கோவையில் பல மாதங்களாக மழை பெய்யாமல் இருந்ததால், பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.


வழக்கமாக மே மாதங்களில் பிற மாவட்டங்களை விட குறைவான வெப்பமே நிலவி வரும் கோவை, இந்த முறை மற்றும் மாவட்டங்களுக்கு போட்டியாக தினமும் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகியது. வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினார்கள்.




தொடர் கனமழை


இதனிடையே கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. கோவை மாநகரப் பகுதிகளில் மாலை நேரம் மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று கோவை மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு உண்டு என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் இன்று மதியத்திற்கு பிறகு வெயில் தணிந்து காணப்பட்டது.


பின்னர் இன்று மாலை ஒரு மணி மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. கோவை பந்தய சாலை, பீளமேடு, கணபதி, வெள்ளலூர், புலியகுளம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், காந்திபுரம் உட்பட நகரின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்தது. உக்கடம் அருகே உள்ள அல் ஹமீன் காலனி பகுதியில் வீட்டின் மாடியில் குழந்தைகள் மழையில் துள்ளி குதித்து உற்சாகமாக மழையில் நனைந்து விளையாடினார்கள்.


தொடர் மழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மேலும் படிக்க : டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து.. மூச்சுத்திணறலால் ஒருவர் உயிரிழப்பு!