திரைப்பட நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பின் காரணமாக நேற்று, உயிரிழந்தார். இதனிடையே அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் மாரிமுத்து கலந்து கொண்ட போது, ஜோதிடத்தை எதிர்த்து தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அதனால் ஜோதிடர் மகரிசி மந்திரசால சுவாமிகள் என்பவருக்கும், மாரிமுத்துவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.


மாரிமுத்து மரணம் - ஜோதிடர்கள்:


மாரிமுத்து உயிரிழந்த நிலையில், ஜோதிடத்தை எதிர்த்து பேசியதே அவரது மரணத்திற்கு காரணம் என சமூக வலைதளங்களில் சிலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக ஜோதிடர் மகரிசி மந்திரசால சுவாமிகள் கூறுகையில், “மாரிமுத்து நல்ல நடிகர். அவரது மறைவிற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது குடும்பத்தினர் மற்றும் கலைத் துறையினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறோம். ஒருவர் மரணத்தை கொச்சைப்படுத்துவது, மரணத்தை வைத்து அரசியல் செய்வது என்பது அசிங்கம்.


விமர்சிப்பது அவர் உரிமை:


மாரிமுத்து இறந்ததால் கண்டெண்ட் கிடைத்து விட்டது என பேசுவது மன்னிக்க முடியாத குற்றம். யாரும் கடவுளை, ஜோதிடத்தை பகைத்து கொள்ள முடியாது. அவர் ஒரு நடிகர். நடிப்பது அவர் தொழில். ஒரு படத்தில் கடவுளுக்கு ஆதரவாகவும், ஒரு படத்தில் கடவுளுக்கு எதிராகவும் நடிப்பார். ஒரு படத்தில் ஜோதிடத்திற்கு ஆதரவாகவும், ஒரு படத்தில் ஜோதிடத்திற்கு எதிராகவும் நடிப்பார். அவர் இயக்குநர் சொல்வதை கேட்பவர்.


அந்த விவாத மேடை நிகழ்ச்சியில் ஜோதிடர்களை ஒருமையில் பேசியது தான் குற்றம். ஜோதிடத்தை விமர்சனம் செய்தது குற்றமல்ல. அது அவர் உரிமை. ஒருமையில் பேசியதற்காக மாரிமுத்து அப்போதே மன்னிப்பு கேட்டார். அதுவாக இருந்தாலும் ஒருவர் மரணத்திற்கு பின்னர் அவரை புகழ்ந்து பேசுவது தான் மனித இயல்பு. அதை வைத்து அரசியல் செய்வது மன்னிக்க முடியாத குற்றம்.


கொச்சைப்படுத்தலாமா?


மாரிமுத்து மீது புகார் கொடுக்க வேண்டுமென்ற போதே நான் எதிர்த்தேன். உண்மையான ஜோதிடர்கள் வியாபாரம் செய்வதில்லை. ஒருவன் மரணத்தை கொச்சைப்படுத்துவன் மனிதன் அல்ல. அது மன்னிக்க முடியாத குற்றம். எத்தனையோ பேர் கடவுளை, சோதிடத்தை குறை பேசியுள்ளார்கள். அவர்கள் இறந்து விட்டார்களா? யாராக இருந்தாலும் பிறக்கும் போதே மரணம் முடிவு செய்யப்படும். சமூக வலைதளங்களில் மரணத்தை கொச்சைப்படுத்துவது முட்டாள்தனமாக செயல்” எனத் தெரிவித்தார்.


தேனி மாவட்டம் வருசநாட்டை சேர்ந்தவர் மாரிமுத்து. சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த அவர் கிடைக்கும் வேலைகளை செய்து 1980 ஆம் ஆண்டின் பிற்பகுதி காலக்கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார். தொடர்ந்து  நடிகர் ராஜ்கிரண், இயக்குநர்கள் மணிரத்னம், வசந்த், சீமான், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்ட  இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அதன் மூலம் பல படங்களில் பணியாற்றிய மாரிமுத்து சிலம்பரசன் நடித்த மன்மதன் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியனார்.


அவர்,  நடிகர் பிரசன்னா நடித்த ‘கண்ணும் கண்ணும்’ படம் மூலம் இயக்குநரானார்.  தொடர்ந்து புலிவால் படத்தை இயக்கிய மாரிமுத்து, தொடக்கத்தில் இருந்தே சில படங்களில் நடிக்கவும் செய்திருந்தார். அவரை முழுநேர நடிகராக இயக்குநர் மிஷ்கின் யுத்தம் செய் படத்தில் நடிக்க வைத்தார். இதன்பின்னர்  முழுநேர நடிகராக மாறிய மாரிமுத்து ரஜினி, கமல், விஜய், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். 


Director Marimuthu: இயக்குநர் மாரிமுத்து உடல் இன்று அடக்கம்.. சொந்த ஊரில் அஞ்சலி செலுத்த குவிந்த பொதுமக்கள்..!