நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய நகரப் பகுதிகளிலும், அதையொட்டிய கிராமப் பகுதிகளிலும் படுகர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.  படுகர் இன மக்கள் தங்களுக்கென தனித்துவமான கலாசாரம், வழிபாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கடைபிடித்து வாழ்ந்து வருகின்றனர். இந்த சமூகத்தை சேர்ந்த பலர் கடந்த சில ஆண்டுகளாக மேற்படிப்பு முடித்து, மத்திய, மாநில அரசுகளில் முக்கியப் பதவிகளை அலங்கரித்து வருகின்றனர்.


படுகர் இன விமானி:


அதேபோல கடந்த சில வருடங்களாக இந்த சமுதாயத்தைச் சேர்ந்த பலர் கப்பல் படை, ராணுவம் உள்பட பல்வேறு துறைகளிலும் காலூன்றி வருகின்றனர். இந்நிலையில், நீலகிரியில் படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் முதல் முறையாக விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.




நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள நெடுகுளா குருக்கத்தி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மணி – மீரா தம்பதியர். மணி  கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாய் மீரா இசை ஆசிரியையாக பணி புரிந்து வருகிறார். இவர்களது  மகள் ஜெயஸ்ரீ படுகர் சமுதாயத்தில் இருந்து முதல் பெண் விமானியாக தேர்வாகியுள்ளார். கோத்தகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஜெய ஸ்ரீ பள்ளி படிப்பை முடித்துள்ளார். பின்னர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படிப்பை முடித்துள்ளார்.


இதையடுத்து சில ஆண்டுகள் ஐடி துறையில் வேலை பார்த்து வந்த இவர், விமானியாக ஆக வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து விமானியாக வேண்டும் என்ற தனது ஆசையை ஜெய ஸ்ரீ பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். அதற்கு பெற்றோர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து தென்னாப்பிரிக்காவில் ஜெய ஸ்ரீ விமான பயிற்சி எடுத்துக் கொண்டார். பைலட் பயிற்சி முடித்து தற்போது ஜெய ஸ்ரீ விமானியாக சேர்ந்துள்ளார். இதனால் ஜெய ஸ்ரீ படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த முதல் பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார்.


பெண் கல்வி:


இதுகுறித்து ஜெயஸ்ரீ கூறுகையில், ”தற்போதைய காலகட்டத்திலும் பெண்களை அண்டை மாவட்டம், மாநிலங்களுக்கே படிக்க அனுப்ப பலர் தயங்குகிறார்கள். இத்தகைய சூழலில் தென்னாப்பிரிக்காவில் விமான பயிற்சி பெற தைரியமாக எனது பெற்றோர் என்னை அனுப்பி வைத்தனர். அதேபோல் பெண் குழந்தைக்கு இவ்வளவு செலவு தேவையா என்று பலர் கேள்வி கேட்டபோது பெண் குழந்தைக்கு தான் இவ்வளவு செலவு தேவை என்று என் பெற்றோர்கள் கூறினார்கள்.




பொதுவாக விமானி என்றால் ஊர் சுற்றும் வேலை என்று அனைவரும் நினைப்பார்கள். ஆனால், வழக்கமான வேலைகளை விட விமானி வேலையில் சவால்கள் அதிகம் உள்ளது. மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை உடல் பரிசோதனை, மனநிலை பரிசோதனைகள் நடைபெறும். அதில் தேர்வு பெறவில்லை என்றால் பணியை இழக்க நேரிடும். எனவே உடல்நிலை மற்றும் மனநிலை மிகவும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்.


மன தைரியம் அதிகளவில் இருக்க வேண்டும். இப்படியாக ஒரு வேலைக்கு நான் வர காரணம் எனது ஆரம்பகால பள்ளி படிப்பும், சிறுவயது கனவும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் முக்கிய காரணம். எங்கள் சமுதாயம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் முதல் பெண் விமானியாக உருவாகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்தார். படுகர் சமுதாயத்தில் இருந்து முதல் பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ள ஜெய ஸ்ரீக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.