செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசாமி கோவில் மற்றும் மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமாக, பல கோடி ரூபாய் மதிப்பு, 2,000 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த சொத்துகளை, சிலர் அபகரிக்க முயல்வதாக வழக்கறிஞர் ஒருவர், கடந்தாண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து கோயில் மற்றும் அறக்கட்டளை நிலங்களை ஆய்வு செய்யும்படி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில், மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் அளவீட்டு பணி, முடியும் தருவாயில் உள்ளது.

 

அதேபோல், திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில், ஒரு மாதமாக வருவாய் துறையினர், கோயில் நிர்வாகத்தினர் அளவீடு செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 29 ம் தேதி இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார், அப்போது கோயில் செயல் அலுவலர் சக்திவேலிடம் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்பட்டதா என கேட்டார். அதற்கு அவர் 80 சதவீதம் வரை மீட்கப்பட்டுள்ளதாகவும். இன்னும் 40 ஏக்கருக்கு மேல் மீட்கவேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் அனைத்து விதமான பணிகளையும் உடனடியாக முடித்துவிட்டு நிலங்களை மீட்கும் மாறு உத்தரவிட்டார் .

 

இதையடுத்து, திருப்போரூர்– நெம்மேலி சாலை, புதிய ஆறுவழிச்சாலை அருகே உள்ள சர்வே எண்கள் 183, 6, 10, 131, 40, 21 ல், உள்ள பல்வேறு சர்வே எண்களை கொண்ட இடங்களை தனிநபர் சிலர் ஆக்கிரமித்து அனுபவித்து வந்துள்ளனர். தற்போது 6 வழி சாலை பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வருவதால் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான இடங்கள் அதிக விலைக்கு விற்பதற்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.



இந்நிலையில் கோயில் நிர்வாகம் சார்பில் திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் உள்ள 16.23 ஏக்கர் விவசாய நிலங்களை கோயில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் வெற்றிவேல் மற்றும் கோயில் பணியாளர்கள் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை மீட்டனர்.



பின்னர் கோயிலுக்கு சொந்தமான இடம், ஆக்கிரமிப்போர் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிப்பு பலகை வைத்தனர். 5 க்கும் மேற்பட்ட சர்வே எண் கொண்ட மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு 81.15 கோடி ரூபாய் இருக்கும் என, கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மேலும் கோயில் நிலங்களை ஆக்கிரமித்து இருக்கும் அனைத்து விதமான சொத்துக்களையும் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு கோயில் நிலங்களை மீட்டு எடுப்பதில் முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது .

 


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*