கர்நாடகாவில் உருவாகும் பாலாறு, ஆந்திர மாநிலம் வழியாக, தமிழகத்திற்குள் பாய்ந்து வருகிறது.வேலுார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில் பாயும் பாலாறு, கல்பாக்கம் அடுத்த வாயலுாரில், கடலில் கலக்கிறது. கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள், பாலாற்றின் பல இடங்களில் தடுப்பணைகளை கட்டியுள்ளன. ஆனால், தமிழகத்தில், போதிய அளவில் தடுப்பணை கட்டப்படாமலேயே இருந்தது.



இதனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது  ஆற்று நீர் கடலில் கலந்து வீணாகும்.வேலுார் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் உள்ள அணைக்கட்டுக்கு அடுத்தபடியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதாவது கீழ் பாலாற்றில், எந்த இடத்திலும் தடுப்பணை இல்லாமலேயே இருந்தது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், 50 ஆண்டு களுக்கும் மேலாக, தடுப்பணை கட்டக்கோரி கோரிக்கை விடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் வந்தனர். ஆனால், தடுப்பணை கட்டப்படாமலேயே இருந்தது.



 

பாலாற்றிலிருந்து கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு தேவையான தண்ணீரும், பல்லாவரம், தாம்பரம் போன்ற நகராட்சிகளுக்கு தேவையான குடிநீரும் வழங்கப்படுகிறது. இவை மட்டுமல்லாமல், ஆற்றின் அருகில் உள்ள கிராமங்களில் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. பாலாற்றின் தேவை அதிகப்படியாக உள்ள நிலையில், தடுப்பணை கட்டுவது குறித்த அறிவிப்பை, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், 'பாலாற்றில் ஏழு இடங்களில் தடுப்பணை கட்டப்படும்' என, அப்பொழுதைய  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதனையடுத்து  28 கோடி ரூபாய் மதிப்பில், செங்கல்பட்டு அருகே, ஈசூர் - வள்ளிபுரம் இடையே பாலாற்றில்  முதல் தடுப்பணை கட்டப்பட்டது.

தடுப்பணை  கட்டி திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது, கடந்த 2 ஆண்டுகளில் பெய்த மழையின் காரணமாக பாலாற்று தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுவதால், தடுப்பணை நிறைந்து நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து உள்ளது. இதனால் சுமார்  10 கிலோமீட்டர் தூரம் பாலாற்றங்கரையில உள்ள ஈசூர் ,புதூர் , பள்ளி பேட்டை  , வள்ளிபுரம் , எலுமிச்ச பேட்டை ஆனூர், விளாகம் உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

 கடந்த ஆண்டு காலங்களில் கோடைகாலத்தில் வறண்டு  காணபட்ட கிணறுகள் தற்போது   நீர் நிரம்பி உள்ளது. கற்பாறை  கிணறுகளும்  நீர் நிலை உயர்ந்து உள்ளது. பல வருடங்களாக இப்பகுதியில் ஒருமுறை மட்டுமே விவசாயம் செய்ததாகவும், தற்போது நிலத்தடி நீர்  அதிகரித்துள்ளதால் மூன்று போகங்கள் விவசாயம் செய்வதாக தெரிவித்துள்ளனர்.  மேலும் சுற்றுவட்டார கிராமங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் குடிநீர் பஞ்சமும் இல்லாமல்  உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.



தடுப்பணையால் ஏற்பட்டுள்ள பலன்கள் குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கடேசன் என்பவர் கூறுகையில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பகுதியில் நீர் பிடிப்பு அதிகரித்துள்ள காரணத்தினால் தற்போது தான் இந்த பகுதியில் கரும்பு செய்யத் துவங்கி உள்ளதாக தெரிவித்தார். அதேபோல் பலர் இங்கு ஒன்று அல்லது இரண்டு போகம் மட்டுமே கடந்த 30 ஆண்டுகளாக பயிரிட்டு வந்தனர் .ஆனால் தற்பொழுது தடுப்பணையில் காரணமாக முப்போகம் பயிர் வைக்க முடிவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

 

இந்த தடுப்பணையை ஐந்து அடியிலிருந்து  கூடுதலாக ஒரு மீட்டர் உயர்த்தி கட்ட வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் அப்பொழுது அமைச்சர்கள் கட்டித் தருவதற்காக ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் அந்த பணி தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. விவசாயிகள் நலன் கருதி உடனடியாக தற்போது உள்ள அரசு இந்த தடுப்பணையை உயர்த்தி தர வேண்டும். மேலும் முப்போகம் இந்த இடத்தில் விளைவதால் நிரந்தர கொள்முதல் நிலையத்தை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.



காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு தடுப்பணைகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது தடுப்பணை கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.