தனது நோய்க்கு மருந்து கடைகளில் ரூ.3000 செலவு செய்து மருந்து வாங்குவதாகவும், அரசு மருத்துவமனையில் மருந்து கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யக்கோரி எம்.எல்.ஏ.விடம் உதவி கேட்ட துப்புரவு ஊழியர்.

 

தோல் உரியும் குறைபாடு 

 

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு ஊராட்சியில் 7 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் கேசவன்(வயது32), இன்னும் திருமணமாகவில்லை. இதே ஊரை சேர்ந்த கேசவனின் தந்தை கன்னியப்பன், கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். தனது தாயாருடன் வசித்து வரும் கேசவன், பிறக்கும் போதே இத்தியேசஸ் எனும் தோல் உரியும் குறைபாடு உள்ள ஒரு வினோத நோயுடன் பிறந்துள்ளார்.

 


இத்தியேசஸ் எனும் தோல் உரியும் குறைபாடு உள்ள ஒரு வினோத நோயுடன் பிறந்துள்ளார்


 

 

ஒரு மாத்திற்கு ரூ. 3 ஆயிரம் செலவு செய்து

 

சிறிய வயதில் 1-ம் வகுப்பில் பள்ளிக்கு சேர்ந்தபோது சக மாணவர்கள் இவரை பார்த்து பயந்து விலகி சென்றதால், சேர்ந்த ஒரு மாதத்திலேயே படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு வீட்டு வந்துவிட்டார். பிறகு இவரின் நிலையை அறிந்து கொக்கிலமேடு ஊராட்சி நிர்வாகம் கருணை அடிப்படையில் 7 ஆயிரம் சம்பளத்தில் துப்புரவு ஊழியர் வேலை கொடுத்தது. அந்த வருமானத்தில் 3 வேலை உணவு சாப்பிட்டு தனது வயதான தாயாருடன் வசித்து வந்தார்.

 


சட்டமன்ற உறுப்பினரிடம் தூய்மை பணியாளர் கோரிக்கை


 

குணப்படுத்த முடியாத நோயால் (இத்தியோசஸ்) நாள்தோறும் உடலில் கடும் எரிச்சல், தூக்கமின்மையால் அவதிப்பட்டு வரும் கேசவன் அரசு மருத்துவமனைகளில் தான் உடலில் பூச பயன்படுத்தும் மருந்து கிடைக்காததால் தனியார் மருந்து கடைகளில் ஒரு மாத்திற்கு ரூ. 3 ஆயிரம் செலவு செய்து வாங்கி வருகிறாராம்.

 

உடலில் பூச மருந்து கடைகளில் பணம் கொடுத்து மருந்து வாங்க முடியவில்லை

 

கிடைக்கும் 7 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் மருந்துக்கு மட்டும் மாதம் 3 ஆயிரம் செலவாகி விடுவதால் ரூ.4 ஆயிரத்தில் சாப்பாடு மற்றும் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி கொள்ள முடியாமல் பரிதவித்து வந்துள்ளார். இந்நிலையில் கொக்கிலமேடு கிராமத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்த திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜியை சந்தித்த துப்புரவு ஊழியர் கேசவன் போதிய வருமானமில்லாததால் மாதா, மாதம் தன்னுடைய நோய்க்கு தற்காலிக தீர்வாக உடலில் பூச மருந்து கடைகளில் பணம் கொடுத்து மருந்து வாங்க முடியவில்லை எனவும், மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் தனக்கு தேவையாக மருந்து கிடைக்க தாங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவரிடம் கோரிக்கை விடுத்தார்.

 

மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் குறிப்பட்ட மருந்து

 

கேசவனின் கோரிக்கையை மனிதநேயத்துடன் கேட்டறிந்த எம்.எல்.ஏ. பாலாஜி தமிழக சுகாதாரத்துறை அமைச்சரிம் பேசி மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் குறிப்பட்ட மருந்து மாதா, மாதம் (பேராபின் லிக்யூடு) கிடைக்க ஏற்பாடு செய்வதாக அவரிடம் உறுதியளித்தார். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் வாக்குறுதி அளித்த சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் இந்த தூய்மைப் பணியாளர்களின் வாழ்வில் ஒரு மாற்றம் நடைபெறும் என நம்பலாம்.