செங்கல்பட்டு அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற கொடூர விபத்தில், நண்பர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 


செங்கல்பட்டு : மயிலாடுதுறை மாவட்டம் ஆனைமேல்  அகரம் பகுதியை சேர்ந்தவர் ரியாசுதீன் ( 38 ). குடும்ப சூழல் காரணமாக துபாயில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறைக்காக வந்திருந்த ரியாஸ்சுதீன் மீண்டும் துபாய் செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றுள்ளார்.‌ தனது வீட்டிலிருந்து தனது நண்பர் மற்றும் உறவினருடன் காரில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலியில் வந்துள்ளார். ரியாசுதீன் நண்பரான மங்களம் கிராமத்தை சேர்ந்த சந்துரு என்பவர் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். 


திடீரென பஞ்சர்


அவருடன் ரியாசுதீன் நண்பர்கள் ஐயப்பன் மற்றும் உறவினர் அன்வர் ஷாதிக் ஆகியோர் வந்துள்ளனர்.‌ சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது செங்கல்பட்டு மாவட்டம் பழவேலி அருகே அதிகாலை வாகனம் திடீரென பஞ்சர் ஆகி உள்ளது. இதனைத் தொடர்ந்து சாலை ஓரத்தில் காரை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு, வாகனத்தை ஓட்டி வந்த சந்துரு மற்றும் ரியாசுதீன் ஆகியோர் இணைந்து டயரை மாற்றிக் கொண்டிருந்தனர்.


இருவர் துடி துடித்து உயிரிழப்பு


அப்பொழுது அதே திசையில் இருந்து அதி வேகமாக வந்த கார் மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் அங்கிருந்து சென்றுள்ளது. இந்த கொடூர விபத்தில்  ரியாசுதீன் மற்றும் சந்துரு ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். மற்ற இருவரும் அங்கிருந்து தள்ளி நின்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 


செங்கல்பட்டு பகுதியில் நடந்த இந்த கொடூர விபத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வேலைக்காக பிழைப்பைத் தேடி துபாய்க்கு சென்ற நபர் விபத்தில் உயிரிழந்திருக்கும் சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 தொடரும் விபத்துக்கள் வாகன ஓட்டிகள் அச்சம்


சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் சுங்கச்சாவடி முதல் பரலோர் சுங்கச்சாவடி வரை நடைபெறும் விபத்துகளில் பல்வேறு உயிரிழப்புகள் ஏற்படுவது வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்பட்டு வருகிறது