தமிழ்நாட்டின் தலைநகராக திகழும் சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் முதல் சாதாரண மக்கள் வரை சென்னையில் வாழ்ந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் சொந்த வீடு உள்பட சொத்துகள் உள்ள ஒவ்வொருவரும் சொத்து வரி செலுத்த வேண்டியது அவசியம் ஆகும். இதுபோன்ற மக்கள் செலுத்தும் பல்வேறு வரிகளை கொண்டே பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


சொத்து வரி பாக்கி:


சொத்து வரி என்பது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என ஒவ்வொன்றிற்கும் மாறுபடும். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகராட்சி என்பதால் இங்கு மாநகராட்சிக்கான சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், சென்னை மாநகராட்சி பல முறை வலியுறுத்தியும் பலரும் சொத்து வரி செலுத்தாமல் இருந்து வருகின்றனர். இதையடுத்து, சென்னை மாநகராட்சி சொத்து வரி செலுத்தாத அதிகளவு நிலுவை வைத்துள்ள 100 பேர்களின் பட்டியலை இன்று வெளியிட்டது.


இதில், அதிர்ச்சி அளிக்கும் விதமாக தமிழ்நாட்டின் பிரபல நிறுவனங்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு அதிகளவு சொத்து வரி பாக்கி வைத்துள்ள நபர்களின் பட்டியலில் ஆயிரம் விளக்கைச் சேர்ந்த டி.எம்.பி. அன்வர் அலி என்பவர் 2 கோடியே 3 லட்சத்து 29 ஆயிரத்து 572 ரூபாய் தனி நபர் அதிகபட்ச பாக்கியாக வைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஆயிரம் விளக்கைச் சேர்ந்த உஷா என்பவர் 1 கோடியே 41 லட்சத்து 87 ஆயிரத்து 717 ரூபாய் நிலுவையாக வைத்துள்ளார்.


சுமார் 3 கோடி சொத்து வரி செலுத்தாத சரவணா ஸ்டோர்ஸ்:


இதில், அதிர்ச்சி அளிக்கும் விதமாக தமிழ்நாட்டின் பிரபல தொழில் நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் சரவணா ஸ்டோர்ஸ் தங்க மாளிகை 93 லட்சத்து 81 ஆயிரத்து 187 ரூபாய் நிலுவை வைத்துள்ளது. அதுமட்டுமின்றி அதன் உரிமையாளரான மறைந்த பல்லக்கு துரையின் பெயரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் பல கிளைகள் லட்சக்கணக்கில் சொத்து வரியை பாக்கி வைத்துள்ளது. குறிப்பாக, தி.நகர் ரங்கநாதன் சாலையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் மட்டும் ரூபாய் 10 லட்சத்து 23 ஆயிரத்து 285 நிலுவை வைத்துள்ளது. சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் மட்டும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு மேல் சொத்து வரி செலுத்தாமல் உள்ளது.


சென்னையில் அதிகளவு சொத்து வரி பாக்கி வைத்துள்ள முதல் 100 நபர்கள் மட்டும் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூபாய் 22 கோடியே 43 லட்சத்து 92 ஆயிரத்து 188 ஆகும். சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள பட்டியலின்படி, சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனமும், அதன் உரிமையாளர் மறைந்த பல்லக்கு துரையின் பெயரிலும் உள்ள சொத்துக்களின் சொத்து வரி பாக்கி மட்டும் ரூபாய் 2 கோடியே 90 லட்சத்து 9 ஆயிரத்து 903 உள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள முதல் 100 நபர்களின் பாக்கி வசூலை 22 கோடிக்கு மேல் உள்ள நிலையில், மற்றவர்களின் வரி பாக்கியைச் சேர்த்தால் ரூபாய் 100 கோடிக்கு மேல் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் இவர்களிடம் இருந்து சொத்து வரி பாக்கியை விரைவில் வசூலிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


மேலும் படிக்க: Kanchipuram Attack : “ஓட, ஓட பெண் காவலரை துரத்தி சென்று வெட்டிய கொடூரம்” காஞ்சியில் அதிர்ச்சி சம்பவம்..!


மேலும் படிக்க: "என்னை பார்த்து பயப்படுகிறார்களோ இல்லையோ, காளியம்மாளை பார்த்து பயப்படுகிறார்கள்" - சீமான்