சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான 33 கிரவுண்ட் நிலம் அண்மையில் மீட்கப்பட்டது.  இந்த இடத்தில் இயங்கி வந்த தனியார் பள்ளி, தற்போது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பெயரில் இயங்கி வருகிறது. மேலும் அந்தப் பள்ளியை தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை நடத்தும் என இந்து சமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில், சென்னை கீழ்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான 1,970 சதுர அடியை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டிருந்தன. இவற்றை பொக்லைன் இயந்திரத்தின் மூலம் நேற்று அகற்றப்பட்ட ரூ.5 கோடி மதிப்பு நிலம் மீட்கப்பட்டது. இப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

 

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடத்தின் சாலையோர பகுதியில் உள்ள 1,970 சதுர அடி நிலத்தில் 3 கடைகள் 1954-ம் ஆண்டு கங்காதரன் என்பவரால் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. அவர் இறந்த பின்னர் 2014-ஆம் ஆண்டு முறைகேடாக சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.



இதுகுறித்து ஏற்கெனவே அவர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை மூலம் நோட்டீஸ்அனுப்பி விளக்கம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அவர்கள் முறையான விளக்கத்தை அளிக்காததால் அறநிலையத்துறையிடம் நிலத்தை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதனடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள 140 கிரவுண்ட் நிலத்தையும் முழுமையாக ஆக்கிரமிப்பில் இருந்துமீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உகந்ததாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.



இதேபோல், இந்து சமய அறநிலையத் துறையின் சொத்துகளை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள் தாங்களாகவே வருகை தந்து அந்த நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். இதுவரை சுமார் ரூ.600 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அறநிலையத் துறைக்கு சொந்தமான அனைத்துநிலங்களும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு கோயில்கள் வசம் கொண்டுவரப்படும். இதேபோல் சென்னை நகரின் பிரதான சாலையில் உள்ள மற்ற நிலங்களை திருக்கோயில் மூலம் சுவாதீனம் பெறப்பட்டு அதிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.



இந்த நிகழ்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எம்.கே.மோகன் திரு. தயாகம் கவி, காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் திரு. ஜெயராமன், சென்னை மண்டல உதவி ஆணையர் திருமதி கவேனிதா, காஞ்சிபுரம் மண்டல உதவி ஆணையர் திருமதி ஜெயா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.