காஞ்சிபுரத்தில் குடிபோதையில் தகராறு செய்ததால் கணவனை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்த மனைவியை காவல்துறை கைது செய்தனர். காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழ்கதிர்பூர் கிராமம் புதுத் தெருவை சேர்ந்தவர் கங்காதரன் (35). இவரின் மனைவி அர்ச்சனா (32). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது, இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். கங்காதரன் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கங்காதரன் லாரி ஓட்டுநராக மாதத்தில் சில நாட்கள் மட்டுமே வேலைக்கு செல்வதும், பின்பு அப்பொழுது கிடைக்கும் பணத்தை வைத்து கொண்டு, தினமும் குடித்துவிட்டு வந்து கங்காதரன், மனைவி அர்ச்சனாவுக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது. 



மேலும் தொடர்ந்து கங்காதரன் மனைவி அர்ச்சனாவை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாக தம்பதி இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனை நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே வந்துள்ளது. அதுமட்டுமின்றி கங்காதரன் ஆரம்ப காலகட்டத்தில் குடும்பத்திற்கு தேவையான அனைத்து விதமான பொருளாதாரத் தேவைகளும் பூர்த்தி செய்து வந்துள்ளார்.



ஆனால் கடந்த சில வருடங்களாக குடும்ப செலவுக்கும் பணம் கொடுக்காமல் குடிபோதைக்கு அடிமையாகி இருந்துள்ளார். இதனால் குடும்பம் நடத்த முடியாமல் அர்ச்சனா, குழந்தைகளுடன் தவித்துள்ளார். இதன் காரணமாக அர்ச்சனா தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.



இந்த நிலையில், இன்று அதிகாலை குடும்ப பிரச்னை தொடர்பாக மீண்டும் குடிபோதையில் வந்து தகராறு செய்துள்ளார். வாய்த்தகராறு முற்றி குடிபோதையில் இருந்த கங்காதரன், அர்ச்சனாவை தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அர்ச்சனா, வீட்டில் உள்ள பெரிய கட்டையை எடுத்துவந்து கணவன், கங்காதரனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் மண்டை உடைந்து ரத்தவெள்ளத்தில் கங்காதரன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.



அதிகாலையில்  அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மயங்கிவிழுந்த கங்காதரனை உடனடியாக மீட்டு,  காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கங்காதரன் இறந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் பாலுசெட்டி சத்திரம் போலீசார் சென்று விசாரித்தனர். விசாரணையில் கணவனை மனைவி கட்டையால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் அர்ச்சனாவை கைது செய்து, காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனர். அங்கு வைத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் .



குடும்ப பிரச்னையில் கணவனை மனைவியே உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மது போதையில் அடிமையாகிய கணவரால் தற்போது கணவனை கொலை செய்த மனைவி சிறை சென்றுள்ளதால் இரண்டு குழந்தைகளும் தற்போது ஆதரவின்றி தவித்து வருகிறார்கள்.