தமிழ் திரையுலகின் பிரபல வில்லன் நடிகர்களில் ஒருவர் ஆர்.கே. என்று அழைக்கப்படும் நடிகர் ராதாகிருஷ்ணன். எல்லாம் அவன் செயல், புலிவேஷம் ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ள ஆர்.கே. பாலா இயக்த்தில் வெளியான அவன் இவன் படத்தில் வில்லனாக நடித்தும் அசத்தியுள்ளார். மேலும், ஜில்லா, பாயும்புலி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். நந்தம்பாக்கத்தில் உள்ள டிபென்ஸ் காலனியில் இவரது வீடு உள்ளது.


54 வயதான நடிகர் ஆர்.கே. வீட்டில் அவருடன் அவரது மனைவி ராஜூ (அவருக்கு வயது 48) வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மதியம் ஆர்.கே. வேலை தொடர்பாக வெளியே சென்றிருந்தார். அப்போது, வீட்டில் ராஜூ மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது, வீட்டிற்குள் திடீரென மர்மநபர்கள் 3 பேர் உள்ளே புகுந்தனர். இதைக்கண்ட ராஜூ அதிர்ச்சியில் கூச்சலிட முயற்சித்தார்.





ஆனால், அவர்கள் ராஜூயை கட்டிப்போட்டனர். பின்னர், அவர்களது வீட்டில் இருந்த பீரோவில் இருந்த 200 பவுன் நகைகள், 2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பி ஓடினர். தனது பணி முடிந்து வீட்டுக்கு வந்த ராதாகிருஷ்ணன் தனது மனைவி கயிற்றால் கட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், வீட்டில் நடந்த சம்பவம் அறிந்து அதிர்ச்சியில் உறைந்த நடிகர் ராதாகிருஷ்ணன் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நந்தம்பாக்கம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, வீட்டில் இருந்த காவலாளி மாயமாகியதும், அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியிருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர், வீட்டிலும், வீட்டின் அருகேயும் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், காவலாளி ரமேஷ் உள்பட 3 பேரும் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதை போலீசார் கண்டுபிடித்தனர்.




இது பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தப்பியோடிய நேபாளத்தைச் சேர்ந்த காவலாளி ரமேஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர். பிரபல குணச்சித்திர நடிகரின் மனைவியையே கட்டிப்போட்டு 200 பவுன் நகைகளை கொள்ளையைித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க : போலி மதுபாட்டில்கள் கடத்தி வந்த வாலிபர்கள்....போலீசாரை கண்டு லாரி ஓடும்போதே தப்பி குதித்து ஓட்டம்...!


மேலும் படிக்க : Crime: பிடித்ததையெல்லாம் வாங்கி கொடுத்து மகளைக்கொன்ற தந்தை...சாதி வெறியால் கர்நாடகாவில் நேர்ந்த கொடூரம்