’நெற்களஞ்சியத்தின் பெருமைச் சொல்லும் பிரம்மாண்ட நெற்குதிர்’ சுற்றுலாத்தலமாகுமா பாலைவனநாதர் சுவாமி கோயில்..?
சிஎஸ் ஆறுமுகம், தஞ்சாவூர் | 04 Aug 2021 09:26 PM (IST)
நாட்டில் வறட்சி நிலவிய காலத்திலும், கொடும் பஞ்சம் தலைவிரித்தாடிய கால கட்டத்திலும் நெல்லை வாரி வழங்கி மக்களின் பஞ்சத்தை போக்கிய சிறப்பு இந்த நெற்குதிருக்கு உண்டு.
பாலைவனநாதர் கோயிலில் அமைந்திருக்கும் பழமையான நெற்குதிர்
நாட்டில் வறட்சி நிலவிய காலத்திலும், கொடும் பஞ்சம் தலைவிரித்தாடிய கால கட்டத்திலும் நெல்லை வாரி வழங்கி மக்களின் பஞ்சத்தை போக்கிய நெற்குதிர் அமைந்துள்ள கோயிலை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம், பாபநாசத்தை அடுத்த திருப்பாலைத்துறையில் தவளவெண்ணகையாள் சமேத பாலைவனநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் தேவாரம் பாடல் பெற்ற, சோழ நாடு காவிரி தென்கரை தலம் சிவன் கோயிலாகும் முற்காலத்தில் பாலைச்செடிகள் அடர்ந்து காணப்பட்டதால் பாலைவனம் என அழைக்கப்பட்டது. கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்கிய தாருகாவனத்து முனிவர்கள் இறைவனையே வெறுத்து, அவறை அழிக்க துஷ்டவேள்வி நடத்தி, யாகத்தில் இருந்து கொடிய புலியை வரவழைத்து இறைவன் மீது ஏவினார். இறைவன் அப்புலியை கொன்று அதன் தோலை ஆடையாக உடுத்திக்கொண்டார். மகாவிஷ்னு, பிரம்மன், வசிஷ்டர், தௌமியர், அர்ச்சுனர் ஆகியோர் வழிபட்டதலம். இக்கோயிலின் இடப்புறத்தில், தஞ்சை நாயக்க மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பெற்ற 12 ஆயிரம் கலம் நெல்லை சேமிக்கும் அளவு கொண்ட மிகப்பெரிய நெற்களஞ்சியம் உள்ளது.
களஞ்சியத்தின் உள்பகுதி மற்றும் வெளிபகுதி பூசப்படவில்லை என்பது இந்த களஞ்சியத்திற்கு மேலும் சிறப்பை சேர்க்கிறது. இந்த அதிசய குதிர் 36 அடி உயரம் உள்ளது. இதன் சுற்றளவு 80 அடியாகும். களிமண் மூலம் செய்யப்பட்ட 5 செ.மீ. உயரம் கொண்ட செங்கற்களை சுட்டு சுற்றுச்சுவரை கட்டி உள்ளனர். வட்ட அமைப்பில் கூம்பு வடிவக்கூரையுடன் ஏறத்தாழ 60 அடி உயரத்துடன் செங்கற்களால் இக்களஞ்சியம் கட்டப்பெற்றுள்ளது. திருப்பாலைத்துறை கோயில் கோபுரம், திருப்பாலைத்துறை நெற்சேமிப்புக்கிடங்கு தீட்சிதரின் முயற்சியில் கட்டப்பட்டவையாகும். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என போற்றப்படும் தஞ்சை தரணியில் மன்னர் காலத்தில் அமைக்கப்பட்ட மாபெரும் குதிர் ஒன்று இன்றைக்கும் நிமிர்ந்து நிற்கிறது. நாட்டில் வறட்சி நிலவிய காலத்திலும், கொடும் பஞ்சம் தலைவிரித்தாடிய கால கட்டத்திலும் நெல்லை வாரி வழங்கி மக்களின் பஞ்சத்தை போக்கிய சிறப்பு இந்த நெற்குதிருக்கு உண்டு.
பாலைவனநாதர் கோயில், பாபநாசம்
இந்த அபூர்வ நெற்களஞ்சியம் (நெற்குதிர்) தஞ்சையை ஆட்சி செய்த அச்சுதப்ப நாயக்கர், ரெகுநாத நாயக்கர் போன்ற நாயக்க மன்னர்களின் ஆட்சியின் போது அமைச்சராக திகழ்ந்த கோவிந்த தீட்சிதர் என்பவரால் உருவாக்கப்பட்டது. பலத்த மழை பெய்தாலும் உள்ளே வெள்ள நீர் புகாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இந்த களஞ்சியம் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. நெற்களஞ்சியத்தின் அடிப்பகுதி, மேற்பகுதி, நடுப்பகுதி என மொத்தம் 3 பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வாயில் என 3 வாயில்கள் உள்ளன. முதலில் அடிப்பகுதியில் உள்ள வாயில் வழியாக நெல்லை கொட்டுவார்கள். அந்த வாயில் பகுதி வரை நெல் நிரம்பியவுடன், அதை அடைத்துவிட்டு, 2-வது வாயில் வழியாக நெல்லை கொட்டுவார்கள். அந்த வாயில் பகுதியும் நிரம்பியவுடன் 3-வது வாயில் வழியாக நெல்லை கொட்டுவார்கள். 3 வாயில்களும் நிரம்பினால் நெற்குதிர் நிரம்பிவிடும். சுமார் 3 ஆயிரம் டன் வரையிலான நெல்லை இந்த குதிரில் சேமிக்கலாம்.
ரெகுநாத நாயக்க மன்னர் கோவிலில் திருப்பணிகளை மேற்கொண்டார். அப்போது கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் விளைந்த நெல்லை சேமிக்க நெற்குதிர் ஒன்றை அமைக்க வேண்டும் என விரும்பி இருக்கிறார். மன்னரின் விருப்பத்தை அவரது அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதர் நிறைவேற்றி உள்ளார். பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பாலைவனநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் விளைந்த நெல்லை இந்த இந்த நெற்குதிரில் சேமித்து வைத்தனர். நாட்டில் பஞ்சம் ஏற்படும் போது இந்த நெற்குதிரை திறந்து அதிலுள்ள நெல்லை மக்களுக்கு வாரி வழங்கி மக்களின் பசிப் பிணியை போக்கினார், மன்னர். இதில் சேமிக்கப்படும் நெல் 5 வருடம் வரை கெட்டுப்போகாது.
1966-ம் ஆண்டு தொல்பொருள் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்படும் இந்த அபூர்வ நெற்களஞ்சியம். இதேபோல தமிழகத்தில் உள்ள பெரும்லான கோவில்களில் நெற்களஞ்சியங்கள் மன்னர் காலத்தில் அமைக்கப்பட்டன. காலப்போக்கில் இந்த நெற்களஞ்சியங்கள்அழிந்து விட்டன. ஆனால் 500 ஆண்டுகளை கடந்தும் இன்னும் கொஞ்சம் கூட பழமை மாறாமல் மன்னர்களின் கட்டிடக்கலையை பறைசாற்றிக் கொண்டு இருக்கிறது, இந்த நெற்குதிர் தஞ்சை மாவட்டத்திற்கு சிறப்பு பெற்றதாகும். ஆனால் கும்பகோணம் அதன் சுற்றுப்பகுதிகளிலுள்ள கோயில்கள், நவக்கிரஹ கோயில்கள், புராதன சின்னங்களை பார்வையிட வரும் வெளி நாடு, மாநில, மாவட்ட மக்கள்,இக்கோயிலிலுள்ள நெற்களஞ்சியம் தெரியாததால், அவர்கள் பார்வையிடாமலே சென்று விடுகின்றனர். எனவே, தமிழக அரசு, தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த திருப்பாலைத்துறையில் தவளவெண்ணகையாள் சமேத பாலைவனநாதர் சுவாமி கோயிலில் உள்ள மிகப்பெரிய நெற்கஞ்சியத்தை,உலக அறிய செய்ய,சுற்றுலா பகுதியாக அறிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.