தேவையான பொருட்கள் 

            முந்திரி 200 கிராம்

             சர்க்கரை 200 கிராம்

            தண்ணீர் தேவையான அளவு

            நெய் தேவையான அளவு

            குங்குமப்பூ ஒரு சிட்டிகை

            ஏலக்காய் பொடி இரண்டு சிட்டிகை

செய்முறை :

முதலில் முந்திரியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் கடாயை வைத்து சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும். (தண்ணீர் குறைவாக சேர்க்க வேண்டும் இல்லையென்றால் பாகு பதம் வர அதிக கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளும்) 

பாகு பதம் வந்தவுடன் அரைத்த முந்திரி விழுதை சிறிது சிறிதாக பாகில் கொட்டி கிளற வேண்டும். பின்னர் குங்குமப்பூ சேர்த்து தேவையான அளவு நெய் சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பின்னர் ஏலக்காய் பொடி சேர்க்க வேண்டும். 

சிறிது நேரத்திலேயே கலவை கெட்டியாக மாறி விடும். இப்போது அடுப்பில் இருந்து இறக்கி வைத்து, சிறிது நேரம் கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். 
 
இப்போது ஒரு தட்டில் நெய் தடவி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவை சிறிதளவு சூடு ஆறியதும் இதை நெய் தடவிய தட்டில் சேர்த்து சமமாக கரண்டியை வைத்து பரப்பி விட வேண்டும். 
 
இப்போது கத்தியால் உங்களுக்கு வேண்டிய வடிவத்தில் வெட்டி விட்டு, ஆறியதும் எடுத்து சாப்பிடலாம். அவ்வளவு தான் சுவையான முந்திரி கேக் தயார். 
 

முந்திரியின் பயன்கள் 

 
முந்திரியில் அதிக அளவில் மெக்னீசியம் இருப்பதால் எலும்புகளுக்கு வலிமை தரும் என சொல்லப்படுகிறது. மேலும் மூட்டு வலி, மூட்டு தேய்மானம் ஆகிய பிரச்சினைகளில் இருந்தும் காக்கும் எனவும் சொல்லப்படுகிறது. உங்களுக்கு முடி பிரச்சினை அதிகமாக இருந்தால், தினமும் 4 முந்திரி சாப்பிடுவதால் அதை சரி செய்ய முடியும் என்ன சொல்லப்படுகிறது.  இவற்றில் உள்ள காப்பர், முடியை அதிக உறுதியுடனும், கருகருவெனவும் வைத்து கொள்ள உதவலாம்.  மேலும் தினசரி 4 முந்திரி சாப்பிடுவதால்  தோலில் உள்ள செல்கள் அதிக புத்துணர்வு பெற்று பொலிவாக இருக்குமாம். ஏனெனில், முந்திரியில் அதிக புரதசத்து, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஜின்க், செலினியம், இரும்புசத்து உள்ளது.
 
மேலும் படிக்க