சொரிக்காம்பட்டியில் சமூக நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் கிடா வெட்டு சமபந்தி வினோத அசைவ விருந்து திருவிழா நடைபெற்றது.

 

கரும்பாறை முத்தையா கோயில் திருவிழா

 

மதுரை மாவட்டம் திருமங்கலம்  அடுத்த  சொரிக்காம்பட்டி ஒன்றியம் பெருமாள் கோவில்பட்டி கிராமத்தில் உள்ள கரும்பாறை முத்தையா கோயிலில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் அசைவ உணவு விழா  வெகுவிமர்சையாக நடைபெற்றுவருகின்றது. இவ்விழாவில் பாரம்பரிய முறைப்படி ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்றுவருகின்றனர். இந்த விழாவில் பலியிடப்படுவதற்காக ஆடுகள் கோயிலிலேயே வளர்க்கப்படுகின்றன. இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக அருகே உள்ள வயல் மற்றும் விளைநிலங்களில் உணவை தேடி செல்லும்போது முத்தையா சாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்து அந்த ஆடுகளை இங்குள்ளவர்கள் விரட்டமாட்டார்கள்.

 

125 கிடாக்களும், 2600 கிலோ அரிசி

 

இந்த ஆண்டு கரும்பாறை முத்தையா கோயில் திருவிழா  தொடங்கிய நிலையில்., கோயிலில் சாமிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை தொடங்கிய பின்னர், நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 125 கிடாக்களும், 2600 கிலோ அரிசி மூலம் தயார் செய்யப்பட்ட அசைவ உணவு வழங்கப்பட்டது. இந்த கறி விருந்தில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. இந்த விருந்தானது வாழை இலையில் சாதமும் ஆட்டுகறி குழம்பும் ஆண்களுக்கு பரிமாறப்பட்டது. இதனை சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். ஒரு வாரத்திற்கு பின்பு இலைகள் காய்ந்த பிறகே பெண்கள் கோயிலின் சாமி தரிசனத்திற்கு வருவார்கள்.

 

சமூக நல்லிணக்கத்திற்காக திருவிழா

 

இந்த கறிவிருந்தில் திருமங்கலம், சொரிக்கம்பட்டி, பெருமாள்கோவில்பட்டி குன்னம்பட்டி, கரடிக்கல், மாவிலிபட்டி, செக்கானூரணி, சோழவந்தான், T.கல்லுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஆண் பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவானது சமூக நல்லிணக்கத்திற்காக நடத்தப்படுகிறது. குழந்தை வரம், வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியத்திற்காக நேர்த்திக்கடனுக்காக ஆடுகளை கோயிலுக்கு  செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பல கிலோ மீட்டர் கடந்து கறி விருந்து.


 

கறி விருந்து திருவிழாவில் கலந்துகொண்ட பிரகாஷ் நம்மிடம் கூறுகையில்..,” மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாங்கள் நண்பர்களாக திருவிழாவிற்கு வந்தோம். பல வருடங்களாக செல்ல வேண்டும் என நினைத்து இந்தாண்டு தான் எங்களால் செல்ல முடிந்தது. திருவிழாற்கு ஆயிரக்கான நபர்கள் கூட்டமாக சென்ற போதும் வரிசையாக உட்கார்ந்து சாப்பிட்டது மிகவும் பிடித்திருந்தது. எங்கள் நண்பர்கள் நினைத்திருந்தால் வீட்டு அருகே ஹோட்டல்களில் பல வகையில் அசைவம் சாப்பிட்டுருக்கலாம். ஆனால் இங்கு வந்து புதிய அனுபவத்தோடு சாப்பிட்டதும், முத்தையா சாமியின் அருள் பெற்றதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இனி ஆண்டுதோறும் இங்கு வந்து சாப்பிட்டு செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது என்று தெரிவித்தார்.