ஜல்லிக்கட்டுக்கு பேமஸ் அலங்காநல்லூர்ல ஜீராவுல குளிக்கிற பால்பன்னும் பேமஸ் தான். நல்லா அழகர்கோயில் கோட்டை சுவர்மாதிரி அடிக்கி வைத்திருந்த பால்பன், இடையில ராக்காயி அம்மன் தீர்த்தம் மாதிரி தூய்மையா தெரிகிறது ஜீரா தண்ணி. மஞ்சள், இளஞ் சிவப்பு நிறத்தில தெரியும் பால்பன்(Paal Bun) ஒரு நாள் முழுக்க ஊரிக்கிடந்தத எடுத்து சாப்பிட்டா உச்சி மண்ட வரைக்கும் இனிக்கும். அலங்காநல்லூர் கேட்டுக் கடையில் இருக்கும் கோபால் டீ கடைக்கு சென்றோம். முறுக்கு, மிச்சர் என பல ஐடங்கள் கடையில் இருந்தாலும் பால்பன் கேட்டுவர கூட்டம் தனியாக இருந்தது.



லேசா ஊருன சூடான பால்பன்ன எடுத்துக் கொடுத்தார் கடையின் உரிமையாளர் பாபு. தித்துக்கும் இனிப்பு பால்பன் சுவை அள்ளுச்சு. பால்பன் உருண்டை மேல மைதா மாவை மழைச்சாரல் மாதிரி தெளிச்சிக்கிட்டே நம்மகிட்ட பேசினார் பாபு...," 64 வருடத்துக்கு மேல இதே இடத்தில் கடை வச்சுருக்கோம். எங்க அப்பா ஆரம்பிச்ச கடை தான் இது. சோழவந்தான் பகுதியில் இருந்து பிழைப்பிற்காக வந்த எங்க அப்பா பால்பன் செய்து கொடுக்கும் வேலை செஞ்சாரு. எங்க அப்பா கோபால் பல பால்பன் மாஸ்டருக்கு முன்னோடி. அவர் கை பக்குவம் தான் எனக்கு இருக்கு.



அப்பா இறப்பிற்கு பின் கடைய நான் தான் கவனிச்சுக்கிறேன். கடையில் வேலை ஆட்கள் இருந்தாலும் நான் தான் பால்பன் செய்வேன். வேற ஆளுக கைக்கு இந்த சுவை நிக்காது. மதுரையில் பல இடங்களில் பால்பன் கிடைச்சாலும் அலங்காநல்லூர் பால்பன் சுவை தனி. அது கேட்டுக்கடை கோபால் கடைனா தூக்கலான பேரு இருக்கு. கொடுக்குற காசுக்கு நிறைவா பண்டத்த கொடுக்குறோம். பால்பன் மைதாவுல செய்தாலும் அதை தூக்கி ஒடைக்கிற மாதிரி எருமை தயிர் கலந்து பன் செய்றேன். அதனால ஒடம்புக்கு குளிர்ச்சியாகிறது. வயித்து கடுப்பிற்கு கூட பால்பன் வாங்கி சாப்புடுவாங்க. வேற எங்கையும் எருமை தயிர்ல பால்பன் செய்றதில்லை. அதனால எங்க கடை பால்பன் வாசமாவும், சுவையாவும் இருக்கும்.



நாத்து நடவு, கருதறுப்பு, கம்பெனி மீட்டிங் என எல்லா இடத்திற்கும் ஆடர் போகும். வெளிநாட்டுக்கு கொண்டு போறவங்க முன்னக்கூட்டியே சொல்லிருவாங்க. அதுக்கு ஏத்தாப்ல பன் செஞ்சு கொடுப்பேன். வெயிட்டு கணக்குல தான் அவங்களுக்கு கொடுப்பேன். அப்பதான் ஏர்போர்ட்டுல பிரச்னை இருக்காது" என்று லேசாக சிரிக்கிறார்." ஒரு பன்னு 10 ரூபாய். வெலவாசி கூடுனாலும் பன்னு ரேட்ட கூட்டல. பன்னோட சைச குறைச்சுட்டு அப்புடியே விற்குறேன். ஒரு பன்னு சாப்டா போதும் வயிறு கம்முனு கிடக்கும். இனிப்பு விரும்பிகள் ஒரே நேரத்துல 2 பன்னு கூட சாப்புடுவாங்க. ஒரு நாளைக்கு 500 பன் சுடுவேன். பொங்கல் டயத்துல மட்டும் நாலு நாளைக்கு 5ஆயிரம் பன்னு செய்வோம்.



அந்த டயத்துல ஜல்லிக்கட்டு பார்க்க வரும் வெளியூர்காரங்க அதிகமாக பன்னு வாங்கிட்டு போவாங்க. பால்பன்ன சூடாவும் சாப்பிடலாம், ஒரு நாள் ஊர வச்சும் சாப்பிடலாம். ரெண்டுக்கும் சுவை மாறும். ஊர வச்சு சாப்பிடும் பன்னு ரெம்பவும் சுவையா இருக்கும். அலங்காநல்லூர் வந்த கண்டிப்பா ஒரு பன்னு சாப்பிடிங்க" என்றார் நிறைவாக.