கேசப் பராமரிப்புக்கு வீட்டிலேயே நாம் எண்ணெய் செய்யலாம். தேங்காய் எண்ணெய்யுடன் சில பொருட்களைச் சேர்த்து எளிதில் செய்யக் கூடிய இந்த எண்ணெய் கூந்தல் உதிர்வுக்கு தீர்வு தரும். கூந்தல் உதிர்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளும் தீர வாரம் இரண்டு முறையாவது எண்ணெய் தேய்த்து முடியை மசாஜ் செய்ய வேண்டும். இதை தவறாமல் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.


பருவகாலம் மாறும்போது முடி சற்று அதிகமாக உதிரும். அதேபோல் மாசு அதிகமான சூழலில் இருக்க நேரும்போதும் முடி உதிர்தல் இருக்கும். இப்போது வீட்டிலேயே வெந்தய எண்ணெய் தயாரிப்பது எப்படி எனக் காண்போம்..


வெந்தய எண்ணெய் செய்யத் தேவையான பொருட்கள்:


அரை கப் வெந்தய விதைகள்
தேங்காய் எண்ணெய்
கற்றாழை ஜெல்: 3 முதல் 4 டீஸ்பூன்
சோம்பு: 5 டீஸ்பூன்
கறிவேப்பிலை: 10 முதல் 12
வேப்பிலை: 10 முதல் 12
துளசி இலை: 10 முதல் 12
செம்பருத்தி பூக்கள்: 5 முதல் 6
கிராம்பு: 3 முதல் 4
சின்ன வெங்காயம்: 1


செய்முறை:


வெந்தய எண்ணெய் செய்ய ஒரு துணியில் அரை கப் வெந்தயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை 3 நாட்கள் முளைகட்டவும். பின்னர் அதை வெயிலில் உலர்த்தவும். இப்போது அதில் சோம்பை சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைக்கவும். தேங்காய் எண்ணெய்யை ஒரு சின்ன பாத்திரத்தில் போட்டு கொதிக்கும் நீரில் நடுவே வைக்கவும்.


பின்னர் வெந்தய, சோம்பு பவுடரை அதில் சேர்க்கவும். அதன்பின்னர் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். பின்னர் கறிவேப்பிலை, துளசி இலைகள், வேப்பிலை, கிராம் சேர்க்கவும். இவை அனைத்தையும் சேர்த்த பின்னர் 2 நிமிடங்கள் சமைக்கவும். பின்னர் செம்பருத்தி பூக்களையும், கற்றாழை ஜெல்லையும் சேர்க்கவும். இப்போது 15 முதல் 20 நிமிடங்கள் வரை இதனை கொதிக்கவிடவும். பின்னர் இந்தக் கலவையை குளிரவிடவும். நன்றாக குளிர்ந்தபின்னர் அதனை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். குளிப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னர் இதனைப் பயன்படுத்தலாம்.


வெந்தய எண்ணெய்யின் நன்மைகள்:


கூந்தலில் ஈரப்பதம் பாதுகாக்கப்படும். வெந்தய எண்ணெய் ஆண்ட்டி பாக்டீரியல், ஆண்ட்டி ஃபங்கல் பன்புகள் கொண்டது. பூச்சிவெட்டு போன்ற பிரச்சனைகள் அண்டாது. வறண்ட கபாலத்தை இது சரி செய்யும். நரைமுடியை தவிர்க்கும். கூடவே கூந்தல் வளர்ச்சியையும் அதிகரிக்கும். முடி உதிர்தலைத் தடுக்கும். கூந்தலை வேரிலிருந்து வலுப்படுத்தும். வெந்தய எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்திவர கூந்தல் அடர்த்தியாக, பளபளப்பாக, மிருதுவாக வளரும். பொடுகுத் தொல்லையை சீராக்கவும் வெந்தய எண்ணெய் சிறந்த மருந்தாக அமையும். எவ்வித கலப்படமும் இன்றி வீட்டிலேயே நாமே செய்து கொள்வதால் நீண்ட காலம் பயன்படுத்த தோதாக எண்ணெய் இருக்கும்.