நாய் நன்றியுள்ளது, நியாபக சக்தியை கொண்டது என பாரம்பரியமாக நாய்களை வீடுகளுக்கு காவலாக வைத்துள்ளனர். நாய் வீட்டுக்கு மட்டுமல்ல வேட்டைக்கு போகும் தெய்வங்களுக்கும், அரசர்களுக்கு துணையாக இருந்தாக சொல்லப்படுகிறது. மதுரை மேலூர் பகுதியில் உள்ள காஞ்சிவனம் சாமிக்கு முழுக்க, முழுக்க நாய்க்குட்டி தான் துணையாக இருந்ததாக நம்பப்படுகிறது.




அதனால் காஞ்சிவனம் கோயில் கருவையில் கூட மூலவரின் அருகில் நாய்க் குட்டிக்கு சிலை வைக்கப்பட்டிருக்கும். இப்படி தமிழர்களிடமும், உலக மக்களிடம் நாய் குட்டி ஒரு பிரதான செல்லப்பிராணியாக இருந்துவருகிறது. செல்லப்பிராணி வரிசையில் தற்போதும் நாய் குட்டிக்கு தான் முதலிடம். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவர் தனது செல்ல நாய் குட்டி இறந்த பின் கோயில் கட்டி வணங்கி வருகிறார். இப்படியான நாய் நேசரின் கதை சற்று ஸ்வாரஸ்சியமானது.







சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவர் சமூக நலத்துறையில் தன் பணியை முடித்துவிட்டு ஓய்வு பெற்றவர். இந்நிலையில் தனக்கு இஷ்ட செல்லப்பிராணியான நாய் ஒன்றை கிட்டதட்ட 11 ஆண்டுகளாக வளர்த்து வந்துள்ளார். இந்த சூழலில் நாய் இறந்த நிலையில் அதன் நினைவாக கற்சிலை ஒன்றை வடித்து வணங்கி வருகிறார். சாமியாக மாறிய இந்த நாயின் பெயர் டாம்குமார். முத்துவின் வீட்டில் வளர்ந்த இந்த நாய்குட்டி தனது இன்னொரு மகனாகவும் அங்கம் வகித்துள்ளது. இந்த நாய் குட்டி கடந்தாண்டு இறந்த நிலையில் அதற்கு சிலை வடித்து வணங்கி வருகிறார். வெள்ளி, செவ்வாய்க்கு பூஜைகளும் நடைபெறுகிறது. நாய் குட்டி இறந்த இடத்தில் இருந்து பிடிமண் எடுத்து  இளையான்குடி, பிராமண குறிச்சியில் உள்ள தனது தோட்டத்தில் சிலை வைத்துள்ளார்.




தற்போது 82 வயதில் உடல் நலம் சரியில்லாத சூழலில் தனது மகன்களின் உதவியுடன் நாய் குட்டி சிலைக்கு மரியாதை செய்துவருகிறார். உயிரோட்டமாக இருக்கும் இந்த நாயின் சிலை காணும் மக்களை கையெடுத்து கும்பிட செய்கிறது. மகாபலிபுரத்தில் இந்த சிலை அதிக விலை கொடுத்து செய்யப்பட்டதாம். சுமார் 60 ஆயிரம் செலவில்  இந்த சிலை உயிரோட்டமாக வைக்கப்பட்டுள்ளது. 'அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்' - என்ற வள்ளுவ வாக்கை போல் முதியவர் முத்து தன் நாய்  மறைந்த பின்பும் பாசத்தை காட்டி வருகிறார்.


இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - watch video | மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தபோதே உயிரிழந்த பரதநாட்டிய கலைஞர்!