இந்தியாவில் குழந்தைகள் மீது தடுப்பூசி ஆய்வுகள் நடத்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அனுமதி அளித்துள்ள நிலையில், 2 வயது முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.


இந்தியாவில் இப்போது 7 இடங்களில் கோவாக்சின் தடுப்பூசி குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2-6 வயது, 6-12 வயது, 12-18 வயது என மூன்று பிரிவுகளின் கீழ், 552 பேர் இந்த கோவாக்சின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, டெல்லி பசாய்தரப்பூர் இ.எஸ்.ஐ மருத்துவமனை,பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனை, கான்பூர் பிரக்கார் மருத்துவமனை, மைசூரு மருத்துவ கல்லூரி, ஹைதராபாத் பிராணம் மருத்துவமனை, நாக்பூர் மெடிட்ரீனியா இன்ஸ்டியூட் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



Covaxin Phase 3 Trial : கோவாக்சின் தடுப்பூசி செயல்திறன் விவரங்களை வெளியிட்ட பாரத் பயோடெக்!


பெற்றோர்கள் அனுமதியுடனே குழந்தைகள் மீதான இந்த தடுப்பூசி சோதனை நடத்தப்படுகின்றது என ஆய்வில் ஈடுபடும் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தடுப்பூசி ஆய்வுக்கு ஒப்புக்கொண்ட பெற்றோரிடம் பேசியபோது, “கோவாக்சின் தடுப்பூசி ஆய்வு குறித்து என்னுடைய குழந்தைக்கு நாள் விளக்கினேன். இதனால் ஏற்படபோகும் விளைவுகளை குறித்து முன்கூட்டிய விளக்கியதால், விவரங்களை தெரிந்து கொண்ட பின்புதான் இந்த தடுப்பூசி சோதனைக்கு என் குழந்தை ஒப்புக்கொண்டாள், மேலும், கொரோனாவின் பரவல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், மூன்றாவது அலையின்போது குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கபட உள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தடுப்பூசிக்கு தடுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபடுத்தி கொள்வதன் மூலம் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.


இதுமட்டுமின்றி, கோவாக்சின் தடுப்பூசி சோதனையில் ஈடுபடுத்தி கொள்ளும் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளிடம் அவர்களின் ஒப்புதல் கேட்கப்படுகின்றது என எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர். சஞ்சய் ராய் தெரிவித்துள்ளார்.



”கொரோனா தடுப்பூசி சோதனை ஆய்வில் பங்கெடுப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சோதனை ஆய்வில் தன்னார்வலராக பங்கு பெறுவதனால், என்னால் முடிந்த உதவியை இந்த நாட்டிற்கு செய்தேன் என்ற உணர்வு தோன்றுகிறது. தடுப்பூசி செலுத்தி கொள்வதனால் பாதுகாப்பாக உணர்கிறேன். விரைவில், நிலைமை சீராகி என்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து விளையாட காத்திருக்கிறேன்” என தடுப்பூசி சோதனை ஆய்வில் கலந்து கொண்ட கார்த்திக் நேமா தெரிவித்துள்ளார்.


இதற்கு முன்பு, கோவாக்சின் தடுப்பூசியின் 3ம் கட்ட மனித பரிசோதனை, இந்தியாவில் 25,800 தன்னார்வலர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. நாடு முழுவதும் 22,500 பேருக்கு , கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த தரவுகளின் அடிப்படையில் தான் அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.


எனவே, அதே தடுப்பூசிகள்தான் இப்போது குழந்தைகளுக்கும் செலுத்தப்படுகிறது எனவும் இதனால், குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என மருத்துவர் ராய் விளக்கியுள்ளார். எனினும், ஒவ்வொரு குழந்தையின் நோய் எதிர்ப்பு மாறுபட்டு இருக்கும் என்பதால், அனைவருக்கும் இந்த தடுப்பூசி பாதுகாப்பானதாக இருக்கும் என உறுதிப்படுத்த முடியாது என தடுப்பூசி குறித்த ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Covaxin | கோவாக்சின் தடுப்பூசி இறுதி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதா? தடுப்பூசியின் செயல்திறன் என்ன?