மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் ஒரே நாளில் 3,095 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு 15,208 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா நோய்த்தொற்று கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் கோவா மற்றும் குஜராத்தில் தலா ஒருவரும், கேரளாவில் மூன்று பேர் என மொத்தம் ஐந்து பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 5,30,867 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் தினசரி தொற்று பாதிப்பு சதவீதம் என்பது 2.61 சதவீதமாகவும், வாராந்திர தொற்று பாதிப்பு சதவீதம் 1.91 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 4.47 கோடியாக (4,47,15,786) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் சதவீதம் 0.03 சதவீதமாக உள்ளது. அதே சமயத்தில் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வருபவர்களின் சதவீதம் 98.78 சதவீதமாக உள்ளது.
இதுவரை இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4.41 கோடியாக உள்ளது (4,41,69,711) என மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் சதவீதம் 1.19 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சக தரவிகளின்படி, இந்தியா முழுவது தற்போது வரை 220.65 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 123 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 726 பேர் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில வாரத்திற்கு முன் தினசரி தொற்று பாதிப்பு 100க்கும் கீழ இருந்த நிலையில் தற்போது 100 தாண்டி பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோர் நாளை முதல் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். தற்போது தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பானது 100-ஐ கடந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Covid : இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. இனி அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம்...!