சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் தற்போது புதுகார் ஒன்றை வாங்கியுள்ளார்.


கானா பாடல்களை பாடி, தமிழ் மக்களின் மனதை ஈர்ததவர் இளங்கன்று பூவையார். விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்குள் பங்கேற்பாளராக நுழைந்த அவர், வெகு சில நாட்களிலேயே அனைத்து சமூக வலைதளங்களிலும் ட்ரெண்டாக ஆரம்பித்தார். பாடல் பாடி, மக்களை மகிழ்விப்பது மட்டுமன்றி, தனது இயல்பான பேச்சால் அனைவரையும் கவருவதும் இவருக்கு கை வந்த கலை. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மாக பா ஆனந்த் இவருக்கு கப்பீஸ் என பெயர் வைத்தார். அந்த கப்பீஸ் என்ற பட்டம் சில நாட்களில் இவருக்கு ’ட்ரேட் மார்க்காக’ மாறியது. 




மாஸ்டரில் மாஸ் காட்டிய பூவையார்:


தனக்கு கிடைத்த வாய்ப்புகளை தக்க சமையத்தில் பயன்படுத்திக் கொண்ட பூவையார் குறைந்த  காலத்திலேயே  இளம் செலிப்ரிட்டியாக மாறினார். நல்ல குரல் வளம் கொண்ட இவருக்கு, விஜய் நடித்த ‘பிகில்’ படத்தில் வெறித்தனம் பாடலில் அவருடன் சேர்ந்து பாடும் வாய்ப்பும், நடிக்கும் வாய்ப்பும் கிட்டியது. இதையடுத்து, விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தில் உண்டியல் எனும் கதாப்பாத்திரத்தில் வந்து மிரட்டினார் பூவையார்.


 






அது மட்டுமன்றி, நடிகர் கவின் நடிப்பில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான லிஃப்ட் படத்திலும் ‘இன்னா மயிலு…’ பாடலைப் பாடியிருந்தார். இப்பாடல், இணையத்தில் ரீல்ஸ், டப்ஸ் என ட்ரெண்டானது. மூப்பில்லா தமிழ் தாயே எனும் பாடலில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானுடன் சேர்ந்து பணிபுரியும் வாய்ப்பைப் பெற்ற பூவையார் தற்போது பல கமிட்மென்டுகளில் பிசியாக பணிபுரிந்து வருகிறார். 




புது கார் வாங்கிய பூவையார்:


பூவையாரின் குடும்பம் மிகுந்த ஏழ்மை நிலையில் இருந்ததாக அவரே விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் பல நேர்காணல்களிலும் கூறியிருக்கிறார். அது மட்டுமன்றி, அவரது குடும்பத்தின் நிலை உயர காரணமாகவும் இருந்துள்ளார். இவர் தற்போது, புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். மேலும் கார் முன் நின்று அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். டிவி நிகழ்ச்சியில் சாதாரண பங்கேற்பாளராக வந்து, இன்று தன்னைப் போன்ற பலருக்கு அடையாளமாய் விளங்கும் பூவையாரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.