Dhruva Natchathiram: துருவ நட்சத்திரம் படத்தை முடிக்க பணம் இல்லாததால் நடிக்க வந்ததாக என இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். 


தமிழ் திரையுலகில் ரொமான்டிக் படங்களைக் கொடுத்து தனக்கு என தனி ஸ்டைலை உருவாக்கி கொண்டவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன் (Gautham Menon). இவர் 2001ஆம் ஆண்டு மாதவன், ரீமாசென் நடிப்பில் வெளிவந்த மின்னலே படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.


முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இவர், அடுத்ததாக காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால், என்னை நோக்கி பாயும் தோட்டா, வெந்து தணிந்தது காடு போன்ற படங்களை இயக்கி உள்ளார். 


காதல் மொழி பேசும் இயக்குநராக மட்டுமே இருந்த கௌதம் வாசுதேவ் மேனன் திரைப்படங்களில் நடிக்கவும் ஆரம்பித்தார். சமீப ஆண்டுகளாக படங்களில் பிஸியாக நடித்து வரும் கௌதம், விஜய் நடித்துள்ள லியோ படத்திலும் நடித்துள்ளார்.


திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்னதாக, துருவ நட்சத்திரம் படத்தை இயக்குவதாக கௌதம் வாசுதேவ் மேனன் அறிவித்திருந்தார். ஆரம்பத்தில் இதில் சூர்யா நடிப்பார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் விக்ரம் இணைந்தார். ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் என பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர்.


துருவ நட்சத்திம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த போது படத்தின் வெளியீட்டு பணிகள் தொடர்ந்து தள்ளிப்போனது. இதற்கிடையே 2017ஆம் ஆண்டு துருவ நட்சத்திரம் டீசர் வெளியாகி பெரிதாக கவர்ந்தது.  அதன் பின் ஒரு மனம் பாடல் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், தொடர்ந்து அப்டேட் எதுவும் வரவில்லை. பட ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். தற்போது பலகட்ட தடைகளைத் தாண்டி வரும் நவம்பர் 24ஆம் தேதி திரைக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


இந்த நிலையில், துருவ நட்சத்திரம் படம் குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். அதில், துருவ நட்சத்திரம் படத்திற்கான படப்பிடிப்பு முடிந்தது என்றும், படத்தின் டப்பிங் வேலைகளும் முடிந்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.


துருவ நட்சத்திரம் படத்தின் போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் பாதியில் நின்றதால், போதிய அளவு பணமில்லை என்றும், அதற்காக தான், தான் படங்களில் நடிக்க ஆரம்பித்ததாகவும், அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு துருவ நட்சத்திரம் படத்தின் பணிகளை முடித்துள்ளதாகவும் கௌதம் கூறியுள்ளார். 


துருவ நட்சத்திரம் படத்தின் கிளைமாக்ஸ் முடியாமலேயே இருக்கும் என்றும், படம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தால் அடுத்த பாகம் எடுக்கத் தயாராக இருப்பதாகவும் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க: Deepika Padukone: துப்பாக்கியுடன் வில்லி சிரிப்பு.. 'சிங்கம்' சீரிஸில் இணைந்த தீபிகா படுகோன்.. ஃபயர் விடும் ரசிகர்கள்!


Suriya: சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரை பார்த்து அசந்துபோன விஜய்.. லோகேஷ் சொன்ன தகவல்!