நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் வெளியாகி கடுமையான விமர்சனங்களைப் பெற்ற ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படம் வெளியாகி இன்றோடு 8 ஆண்டுகள் நிறைவடைகிறது. 


மார்க் ஆண்டனி இயக்குநரின் படம் 


கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா நடிப்பில் ‘மார்க் ஆண்டனி’ படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனின் முதல் படமாக 2015 ஆம் ஆண்டு வெளியானது ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ . இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், கயல் ஆனந்தி, மனிஷா யாதவ், விடிவி கணேஷ், சிம்ரன், யூகிசேது, ஆர்யா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவின் ஆக மோசமான படங்கள் என்ற வரிசையில் இப்படம் இடம் பிடித்தது. அதற்கு காரணம் இளைஞர்களை கவர வேண்டும் என்ற எண்ணத்தோடு படம் முழுக்க வைக்கப்பட்ட இரட்டை அர்த்த வசனங்கள், பாலியல் ரீதியிலான காட்சிகள் தான். 


படத்தின் கதை


ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரே அறையில் இரண்டு பெண்குழந்தைகள் (கயல் ஆனந்தி, மனிஷா யாதவ்),  ஒரு ஆண் குழந்தை  (ஜி.வி.பிரகாஷ்குமார்) பிறக்கின்றன. 3 பேரும் பள்ளியில் ஒன்றாக படிக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷூக்கு கயல் ஆனந்தியுடன் காதல் ஏற்படுகிறது. ஆனால் தாங்கள் தனிமையில் இருந்ததை சக மாணவர்களிடம் சொல்லியதால் காதல் முறிகிறது. சமாதானப்படுத்த ஜி.வி. செல்லும் இடத்தில் ஏமாற்றம் மிஞ்சுகிறது. அப்போது மனிஷா யாதவ் ஜி.வி.யை காதலிப்பதாக சொல்ல, ஆனந்தி மேல் இருக்கும் கோபத்தில் அந்த காதலை ஏற்கிறார். 


இதனிடையே மனிஷா யாதவுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் கடுப்பாகும் ஜி,வி.பிரகாஷ்குமார், அந்த காதலையும் முறித்து விட்டு தன் மாமா விடிவி கணேஷை தேடி கும்பகோணம் செல்கிறார். ஆனால் அங்கு கயல் ஆனந்தி இருப்பது தெரிய வர, இந்த இருவரில் யாருடன் ‘காமம் கலந்த காதல்’ ஜி.வி.பிரகாஷூக்கு  செட் ஆனது என்பதே இப்படத்தின் கதையாகும். 


படம் முழுக்க முகம் சுளிக்க வைத்த காட்சிகள்


விர்ஜின் பொண்ணு தொடர்பான கருத்து தொடங்கி படம் முழுக்க முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதுவும் ஜி.வி.பிரகாஷ், கயல் ஆனந்தி எப்படி இப்படி ஒரு அடல்ட் கதையில் நடித்தார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்தது. பெண்களை இழிவுப்படுத்தும் வசனங்களும், பாலியல் உறவை கொச்சையாக பேசியும் கடும் சர்ச்சையில் படக்குழுவினர் சிக்கினார்கள்.


இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் - மனிஷா யாதவ் இடையேயான லிப் லாக் முத்த காட்சி 36 முறை டேக் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சிம்ரன், ஆர்யா ஆகியோர்  வந்தும் மோசமான காட்சிகள், வசனங்கள் வைக்கப்பட்டதால் இப்படம் விமர்சனத்திற்கு உள்ளானது. படத்திற்கு 18 வயதினருக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் வகையில் ஏ சர்ட்டிபிகேட் வழங்கப்பட்ட நிலையில் இதுபோன்ற படங்கள் உண்மையில் தமிழ் சினிமாவின் அழிவுக்கு காரணமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. 




மேலும் படிக்க: Bhagyalakshmi Actor: பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் மீது வாட்டர் பாட்டில் வீச்சு - அதிர்ச்சியில் ரசிகர்கள்..!