விநாயகர் சதுர்த்தி நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அமைதியான முறையில் கொண்டாடப்படுவதை உறுதி செய்ய தமிழ்நாடு காவல்துறை சார்பில் 71,741 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடர்பாக முக்கிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.


விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - பாதுகாப்பு ஏற்பாடு


விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான முறையில் கொண்டாடப் படுவதை உறுதி செய்ய தமிழ்நாடு காவல்துறை சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விநாயகர் சிலை ஊர்வல நிகழ்ச்சி முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு திவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது. முக்கியமான ஊர்வலங்களில் கண்காணிப்பு பணிக்காக ட்ரோன்கள் மற்றும் Mobile CCTV கேமராக்கள் உபயோகப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விதிமுறைகளின் விவரம்



  • நிறுவப்பட இருக்கின்ற சிலைகள் தண்ணீரில் கரையக்கூடிய இயற்கையான களிமண்ணால் மட்டும் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.
    சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்ட்ர் ஆப் பாரிஸ் மற்றும் தடை செய்யப்பட்ட வேதிபொருட்கள் அடங்கிய வர்ண பூசுதலை பயன்படுத்தக் கூடாது.

  • சிலையின் உயரம் பீடம் உட்பட 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

  • சிலைகளானது வேற்று மத வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகில் நிறுவப்பட கூடாது. 

  • விழா அமைப்பாளர்கள் எளிதில் தீப்பற்றகூடிய பொருட்களை கொண்டு பந்தல் அமைப்பதை தவிர்த்திடல் வேண்டும்.

  • விழா அமைப்பினைச் சேர்ந்த இருவர் 24x7 சிலைப்பாதுகாப்பில் ஈடுபட வேண்டும்.

  • சிலைக் கரைப்பு ஊர்வலமானது அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாகவும் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மூலமாக மட்டுமே எடுத்துச்செல்லப்பட வேண்டும்.

  • விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்கள் ஊர்வல வழித்தடங்கள் மற்றும் சிலைக் கரைப்பு இடங்களில் பாட்டசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

  • விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களின் போது மத துவேச கோஷங்களை எக்காரணத்தை முன்னிட்டும் எழுப்பக் கூடாது.

  • ஒலிப்பெருக்கிகள் காலை 2 மணி நேரம் மற்றும் மாலை 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது.

  •  விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். 



விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களின் போது பொது மக்களுக்கு எவ்வித இடையூறு இல்லாமலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமலும் அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற அமைப்பாளர்களும் பொதுமக்களும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.