தி பேமிலி மேன் 2  இணையத் தொடரை மத்திய அரசு நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மெளனம் காப்பது மிகுந்த மனவேதனையாக உள்ளதாக இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.


இதுதொடர்பாக பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்கள் இனத்திற்கு எதிரான
தி பேமிலி மேன் 2  இணையத் தொடரை நிறுத்த தமிழர்களும் தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட
அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும் கூட இந்திய ஒன்றிய அரசு அத் தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மெளனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. தமிழீழப் போராளிகளின் விடுதலை போராட்டக்களத்தையும், அவர்களின் வரலாற்றையும் அறியாத, தகுதியற்ற நபர்களால், தமிழின விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன.


அறமும் வீரமும் தன்னலமற்ற ஈகமும் செறிந்த போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடும் தொடரை உருவாக்கியிருப்பதை
வன்மையாக கண்டிக்கிறேன். இத்தொடரை உடனே நிறுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிடவேண்டும். இத்தொடரில் தமிழ், முஸ்லீம், வங்காளி என குறிப்பிட்ட இனமக்களுக்கு எதிரான மன நிலையோடு தொடர்ச்சியாக எடுக்கப்படுவதை அனைவரும் அறிவீர்கள்.


Family Man 2 | வரலாற்றை கொச்சைப்படுத்தியது Family Man 2 : கொதித்த பிரபல இயக்குநர்!The Family Man 2: வேறலெவல் சமந்தா.. தமிழகத்தில் சத்தமில்லாத பேமிலி மேன் 2 - சோஷியல் மீடியா பார்வை என்ன?


தி பேமிலி மேன் 2 தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும். எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து OTT தளத்தில் வெளிவந்தால் அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது என்பதை கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.




முன்னதாக, இந்த இணைய தொடரில் சில காட்சிகள் தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளதாக கூறி, இந்த தொடருக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தச் சூழலில், இந்த தொடருக்கு தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ ட்ரைலர் வெளியான சில நாட்களில் மத்திய செய்தித்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதினார். இந்த சூழ்நிலையில் பல எதிர்ப்புகளை தாண்டி இந்த தொடர் கடந்த ஜூன் 3-ஆம் தேதி அமேசானில் வெளியானது. 


 






பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன் இந்த தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் 'தமிழ் இனத்தின் விடுதலைக்கு போராடிய இயக்கத்தின் வரலாறை கொச்சைப்படுத்தி தவறாக சித்தரிக்கும் இந்த வெப்தொடரை புறக்கணிக்கிறேன். இந்த தொடரை உடனே நிறுத்தவும். நிறுத்தும்வரை அமேசான் ஃபிரைம் சந்தாதாரராக இருக்கவோ இணையவோ போவதில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.