Vijayakanth: மறைந்த விஜயகாந்தை போல், தனது அலுவலகத்தில் தினமும் பசித்தோருக்கு சாப்பாடு போட உள்ளதாக குக் வித் கோமாளி புகழ் தெரிவித்துள்ளார். 

 

கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிசம்பர் மாதம் 28ம் தேதி மறைந்தார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் உடல் அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேட்டியில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று திரை பிரபலங்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  அந்த வகையில் நேற்று விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி படத்தின் மூலம் பிரபலமான நடிகர் குக் வித் கோமாளி விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”நான் ஐயாவின்(விஜயகாந்த்) இறப்புக்கு வந்திருந்தேன். கேப்டன் ஐயா எவ்வளவு உதவி செய்திருக்காங்கன்னு எல்லாரும் சொல்லி இருக்காங்க. அதெல்லாம் நிறைய கேட்டு இருக்கேன். நான் சென்னைக்கு வந்த புதுசுல பக்கோடா, வாட்டர் பாக்கெட் இதுதான் எனக்கு சாப்பாடு. நானும், கஷ்டப்பட்டு இருக்கேன். ஐயா பசின்னு வந்த எல்லாருக்கும் வயிறார சாப்பாடு போட்டு இருக்காரு. அதனால் இன்றிலிருந்து (நேற்று) மதியம் பசின்னு வந்தவர்களுக்கு சாப்பாடு போடப்போறேன். கேகே நகரில் உள்ள எனது அலுவலகத்தில் தினமும் 50 பேருக்கு தினமும் சாப்பாடு போடப்போறேன். பசின்னு  இருக்கற யார் வேண்டுமானாலும் அங்கு வந்து சாப்பிடலாம். 

 

கேப்டன் ஐயாவுக்கு நான் செய்யப்போகிறது இது மட்டும் தான். யாருக்காவது பசி இருந்தால் எனது அலுவலகத்திற்கு வரலாம். அதற்காக அவரிடம் ஆசீர்வாதம் வாங்க வந்தேன். நான் இருக்கும் வரை எனது அலுவலகத்தில் பசித்தோருக்கு சாப்பாடு போடப்படும். எனக்கு பிறகு அடுத்து இருப்பவர்கள் அதை பின்பற்றுவார்கள். நீங்களும் உங்களுக்கு தெரிந்த யாராவது பசியில் இருப்பதை உணர்ந்தால் அவர்களுக்காக சாப்பாடு வாங்கி கொடுங்கள்” என்றார். முன்னதாக விஜயகாந்தின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய புகழ், அவரது சமாதியை சுற்றி வந்து வணங்கினார். 

 

குக்வித் கோமாளி புகழை போல் நடிகர் சென்ராயனும் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜயகாந்தை போல் தன்னால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவி செய்வேன் என கூறினார். விஜயகாந்த் மறைந்த நிலையில், அவரது நினைவிடத்தில் தன்னார்வர்கள், கட்சி நிர்வாகிகள் என பலர் அன்னதானம் செய்து வருகின்றனர்.