சினிமா... மறக்க முடியாத படங்களை மட்டும் தரவில்லை. அதை உருவாக்கியவர்களுக்கு மறக்க முடியாத அனுபவங்களையும் தந்திருக்கிறது. அது ஒவ்வொரு கலைஞருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம். அப்படி ஒரு அனுபவம் இயக்குனர் மணிவண்ணனுக்கும் ஏற்பட்டது. பிந்நாளில் நிறைய உதவி இயக்குனர்களை உருவாக்கிய மணிவண்ணன், முதன்முதலில் உதவி இயக்குனராக சேரவும், தனக்கு கிடைத்த வாய்ப்பை தக்க வைக்கவும் நிறையவே போராடியிருக்கிறார். அதுவும் உதவி இயக்குனராக வாய்ப்பு பெற்ற முதல் படத்திலேயே அவர் சந்தித்த மோசமான அனுபவம், அதை அவர் சமாளித்த விதத்தை அறிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். 





ஹீரோவாக பாரதி ராஜா அறிமுகம்!


16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், சொல்வ சவான்(இந்தி), புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள் என தொடர்ந்து 6 படங்களை வெற்றிகரமாக இயக்கியிருந்த பாரதிராஜா,  ஏழாவதாக எடுத்த படம் கல்லுக்குள் ஈரம். சுதாகருடன் பாரதிராஜாவும் ஹீரோவாக முதன்முறையாக கேமரா முன் அறிமுகமான  படம். பாரதிராஜா இயக்கி நடிக்கும் படம் என்பதால், அவருக்கு இன்னும் அதிக பொறுப்பு அந்த படத்தில் காத்திருந்தது. அருணா உடன் புது முக நடிகையாக விஜயசாந்தி அறிமுகம் செய்யப்பட்டார். லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தியே தான். கிராமத்திற்கு சூட்டிற்கு வரும் படக்குழுவை சேர்ந்த சுதாகரை விஜயசாந்தியும், பாரதிராஜாவை அருணாவும் காதலிப்பது தான் கதை. பெரிய அளவில் திட்டமிட்டு சூட்டிங் துவங்க முடிவு செய்கிறார் பாரதிராஜா. 




மணிவண்ணனை அழைத்து வந்த மனோபாலா...!


இப்போது தன் உதவியாளர்களை அழைத்து, படம் குறித்து ஆலோசித்த பின், என்னென்ன செய்ய வேண்டும் என்று அவர்களிடம் கருத்து கேட்கிறார் பாரதிராஜா. அப்போது முக்கிய உதவி இயக்குனரான மனோ பாலா, கே.ஆர்.ஜி., அலுவலகத்தில் மணிவண்ணன் என்கிற ஒருவர் இருப்பதாகவும், நல்ல படித்தவர், அறிவு நிறைந்தவர், அவர் வந்தால் நல்ல உதவியாக இருக்கும் என தனது நண்பருக்கு வாய்ப்பு கேட்கிறார். மறுப்பே சொல்லாமல் அவரது கோரிக்கையை ஏற்கிறார் பாரதிராஜா. உனக்கு வசதினா கூப்பிட்டுக்கோ என ஓகே சொல்கிறார். இப்போது பாரதிராஜா டீமில் இணைகிறார் மணிவண்ணன். மனோபாலா, மணிவண்ணன் உள்ளிட்டோருடன் ஒரு குழு மைசூரு செல்கிறது. 





‛ஜர்க்’ ஆன விஜயசாந்தி... நழுவ விட்ட மணிவண்ணன்! 


இப்போது விஜயசாந்தியை வைத்து ஆர்ப்பரிக்கும் அருவிக்கு நடுவே ஒரு ஷூட். கன்ட்டினுட்டி(தொடர்ச்சி), எடிட்டிங் ரிப்போர்ட் எல்லாமே மணிவண்ணனின் பொறுப்பு. இப்போது ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. திடீரென பாறை ஒன்றில் தடுமாறுகிறார் விஜயசாந்தி. அதை பார்த்த மணிவண்ணன் பதற, அவர் அக்குளில் இருந்த எடிட்டிங் ரிப்போர்ட் கீழே விழுந்து அருவி நீரில் அடித்துச் செல்கிறது. அப்போது எல்லாமே இங்க் பேனாவில் எழுதப்பட்ட ரிப்போர்ட் தான். கிட்டத்தப்பட்ட 26 நாட்கள் நடந்த படப்பிடிப்பின் ஒட்டுமொத்த எடிட்டிங் ரிப்போர்ட் அது. நீரில் அடித்துச் செல்லப்பட்ட அந்த சம்பவத்தை படக்குழுவில் யாருமே கவனிக்கவில்லை. பதறியடித்து நீரோட்டத்தை பின்தொடர்ந்து சென்ற மணிவண்ணன், ஒரு பாறைக்கு இடையே சிக்கியிருந்த அந்த புத்தகத்தை எடுக்கிறார், வெறும் நான்கு பக்கங்கள் தான் அதில் இருக்கிறது. அதிலும் எழுத்துக்கள் முற்றிலும் அழிந்து போன வெற்று காகிதம். உடலெல்லாம் படபடக்கிறது. வியர்த்து கொட்டுகிறது. 




கண்ணீர் விட்டு கதறிய மணிவண்ணன்!


இப்போது மனோபாலாவிடம் வருகிறார் மணிவண்ணன், ‛பாலா... இந்த மாதிரி நடந்திருச்சு... முதல் படத்துல இப்படியாகிடுச்சே... டைரக்டருக்கு தெரிஞ்சா என்னை தூக்கிடுவார். என்ன பண்றதுனே தெரியல... நானும் துரத்தி போனேன்... எதுவும் கிடைக்கல’ என கண்ணீர்விட்டுள்ளார் மணிவண்ணன். ‛சரி விடு... அதுக்காக கடலுக்குள்ளயா போக முடியும்...’ என ஆறுதல் சொல்கிறார் மனோபாலா. ‛இல்ல பாலா... இது சமாளிக்கிற விசயம் இல்ல... எல்லாமே ரிப்போர்ட்... அது இல்லைன்னா எடிட்டே பண்ண முடியாது...’ என்று கூறிய மணிவண்ணன், ‛எனக்கு ஒரு 3 நாள் டைம் குடு... எல்லாத்தையும் எழுதித்தந்திடுறேன்...’ என மணிவண்ணன் கேட்க, ‛26 நாள் சூட்டிங்கில் எடுத்ததை எப்படி எழுதுவன்னு...’ மனோ பாலா கேட்டுள்ளார். ‛எழுதிடுறேன்... எழுதிடுறேன்...’ என மணிவண்ணன் கூற, மனோபாலாவுக்கு இது எப்படி சாத்தியம் என மனதிற்குள் கேட்டுக் கொண்டே, ‛சரி பாரு ...’ என கூறிவிட்டார் மனோபாலா. 




ஒரே இரவில் 26 நாள் ரிப்போர்ட் தயார்! 


நாளை மைசூருவில் இருந்து நெகட்டிவ் மற்றும் எடிட் ரிப்போர்ட் சென்னை செல்ல வேண்டும். இன்று முழு ரிப்போர்ட்டும் தொலைந்துவிட்டது. 3 நாள் டைம் கேட்டிருந்த மணிவண்ணன், படப்பிடிப்பில் இருந்த ஒளிப்பதிவாளர், ஆடியோ இன்ஜினியர் என படப்பிடிப்பில் பங்கேற்ற ஒட்டுமொத்த டெக்னிசியன்களிடமும் அந்த விபரங்களை விசயத்தை சொல்லாமலேயே ரிப்போர் விபரத்தை சேகரிக்கத் தொடங்கினார். அவர்களிடமும் ஒரு ரிப்போர்ட் இருக்கும். ஆனால் அது அந்தந்த துறை சார்ந்த தனித்தனி ரிப்போர்ட். அவற்றை, தகவல் கேட்பதைப் போல, ‛அண்ணே... அந்த ஷாட்ல எது ஓகே ஆச்சு...’ என்பதை போல, தகவல்களை கேட்டு கேட்டு ஒட்டுமொத்த 26 நாள் எடிட் ரிப்போர்ட்டையும் தனித்தனியாக கேட்டு, விடிய விடிய விழித்திருந்து ஒன்றாக கோர்த்து முடித்துவிட்டார் மணிவண்ணன். இன்று மாலை நெகட்டிவ் மற்றும் ரிப்போர்ட் அனுப்ப வேண்டும். அது மனோபாலா பணி. சரியான நேரத்தில் அவரிடம் ரிப்போர்ட்டை தருகிறார் மணிவண்ணன். 




தூள் கிளப்பிய மணிவண்ணன்... அசந்து போன மனோ பாலா!


இப்போது மனோபாலாவுக்கு எதுவுமே புரியவில்லை. ‛ஒரு ராத்திரியில் எல்லாத்தையும் எழுதிட்டியா...’ என கேட்கிறார் மனோபாலா, ஆமாம் என்கிறார் மணிவண்ணன். மனோபாலாவுக்கு நம்பிக்கை இல்லை. எப்படியும் எடிட்டிங் பாதிக்கும், வரிசை மாறியிருக்கும் என்று தான் எதிர்பார்த்திருந்தார் மனோபாலா. நெகட்டிவ் உடன் ரிப்போர்ட் சென்னை சென்றது. படக்குழுவும் சூட்டிங் முடித்து சென்னை செல்ல, எடிட் முடிந்து தயாரான பர்ஸ்ட் காப்பியை பார்க்கவும் சரியாக இருந்தது. ஒரு காட்சி கூட வீணாகவில்லை. எப்படி திட்டமிடப்பட்டதோ, அப்படியே எடிட் ரிப்போர்ட் இருந்தது. அசந்து போனார் மனோபாலா. மணிவண்ணனை அழைத்தார். ‛மணி... சூப்பர்யா... எழுதி வெச்சுக்க... நீ பெரிய டைரக்டரா வருவ..! இந்த அளவுக்கு நியாபக சக்தியெல்லாம் யாருக்கும் இருக்காது...’ என மெச்சினார் மனோபாலா. தொலைத்த நாளிலிருந்து நிம்மதி இன்றி இருந்த மணிவண்ணனுக்கு அப்போது தான் மூச்சு வந்தது. தான் இயக்குனர் ஆவோமா... இல்லையா என்பதில் இருந்த ஆர்வம் இல்லை அது. தான் உதவி இயக்குனராக தோற்கவில்லை என்கிற நிம்மதி தான் அது. அதன் பின் 17 படங்களை இயக்கியது, பல படங்களுக்கு கதை வசனம் எழுதியது என திரையுலகில் கோலோச்சிய மணிவண்ணனுக்கு தனது முதல் அனுபவம் அவ்வளவு எளிதில் மறந்திருக்காது. 


 


மேலும் பல பிளாஷ்பேக் செய்திகளை படிக்க...


ப்ளாஷ்பேக்: முடியவே முடியாது என்ற பாரதிராஜா... முயற்சித்த பாக்யராஜ்... காமெடியன் கவுண்டமணி உருவான கதை!


ப்ளாஷ்பேக்: அண்ணன்-தம்பி உரசல்... சபையில் அவமானம்... இப்படி தான் இசையமைப்பாளரானார் கங்கை அமரன்!


பிளாஷ்பேக்: விஜயகாந்த்-ஆர்.கே.செல்வமணி லடாய்... ட்ராப்... ட்ராப்... ட்ராப்... புலன்விசாரணை பிறந்த கதை!


 


இது போன்ற செய்திகள் உடனுக்குடன் கிடைக்க....ABP நாடு அப்ளிகேஷனை https://bit.ly/3jjHv9u கிளிக் செய்து டவுன்லோடு செய்யுங்கள்!