கங்கை அமரன்.... இளையராஜாவின் தம்பி என்கிற அடையாளத்தை தாண்டி, தனக்கென பல அடையாளங்களை கொண்டவர். பாடலாசிரியர், இயக்குனர், இசையமைப்பாளர் என அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. சகோதரர்களாய் வாய்ப்புகளை தேடி அவர்கள் வெற்றி பெற்ற கதை அனைவருக்கும் தெரியும். ஆனால் வாய்ப்பு கிடைத்த பிறகு, கங்கை அமரன் தனியாளாக போராடி ஜெயித்த கதை ஒன்றும் இருக்கிறது. இளையராஜாவின் இறகிற்குள் இருந்த கங்கை அமரன், தனியாக அடை காக்கும் கழுகாய் மாற போராட வேண்டியிருந்தது. அதுவும் வெளி ஆட்களுடன் இல்லை... அவரது அண்ணன் இளையராஜாவிடம் என்பது தான் கடந்த கால உண்மை. அதை கொஞ்சம் பின்னோக்கி பார்க்கலாம்.




மலேசியா வாசுதேவன் எடுத்த முடிவு!


பாடகர் மலேசியாவாசுதேவன், கங்கை அமரன் எல்லோரும் நண்பர்கள் என்பது நாம் அறிந்ததே. பொள்ளாச்சியிலிருந்து ஒருவர் தன் நிலங்களை விற்று படம் எடுக்க வருகிறார். மலேசியாவாசுதேவனை சந்திக்கிறார். ஏற்கனவே வாசுவிற்கு கதை தாகம் உண்டு. தன்னிடம் ஒரு கதை இருப்பதை அவர் கூறுகிறார். லோ பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்க முடிவு செய்கிறார்கள். ஒரு சின்ன டைரக்டர் மூலம் மாஸ்டர் சேகர், சங்கீதாவை வைத்து படத்தை எடுக்கலாம் என ஐடியா தருகிறார் வாசு. இசைக்கு இளையராஜாவை போடலாம் என்கிறார் தயாரிப்பாளர். வேணாங்க... அவர் நிறைய சம்பளம் வாங்குவாரு... அவர் உதவியாளர், அவர் தம்பி கங்கை அமரனை போடலாம் என வாசு கூற, அவரும் முழு மனதோடு ஏற்றுக் கொள்கிறார். அது வரை இளையராஜாவிடம் கித்தார் வாசித்துக் கொண்டிருக்கிறார் அமர். அவருக்கு இசையமைப்பாளர் ஆகும் ஆசையே இல்லை. எண்ணமும் இல்லை. மலேசியா அவரை மனம் மாற்றி, ஒப்புக் கொள்ள வைக்கிறார். சரி ஜாலியா பண்ணலாம் என அமரும் ஒப்புக் கொள்கிறார். 




இசை கலைஞர்கள் முன் அமர் சந்தித்த அவமானம்!


அடுத்த ஒரு வாரத்தில் நாளிதழில் விளம்பரம் வருகிறது. புதியவர்கள் தயாரிக்கும் மலர்களிலே மல்லிகை. மலேசியா வாசுதேவன் கதை. இசையமைப்பாளர் கங்கை அமரன் என கொட்டை எழுத்தில் விளம்பரம். ஊரே பார்த்துவிட்டது. அன்றைய தினம் ஏவிஎம் ஆர்ஆர்.,ல் வழக்கம் போல பணிக்குச் செல்கிறார் அமர். முகம் நிறைய கோபத்துடன் காத்திருக்கிறார் இளையராஜா. ‛உனக்கு இசையை பத்தி என்ன தெரியும்...’ என எடுத்த எடுப்பிலேயே கேட்கிறார். கங்கை அமரன் அதை எதிர்பார்க்கவில்லை. ஆடிப்போய் நிற்கிறார். சுற்றிலும் இசை கலைஞர்கள் நிற்கிறார்கள். கித்தாரும் கையுமாக என்ன செய்வது என தெரியாமல் திசைத்து போன அமருக்கு அடுத்தடுத்து வார்த்தையால் அடி விழுகிறது. கித்தாரை வெச்சிட்டு போ... என்கிறார் இளையராஜா. ‛இல்லைண்ணே... சும்மா ப்ரெண்ட்ஸ் கூட ஜாலியா தான்...’ என கங்கை அமரன் பேசி முடிப்பதற்குள், வெளியே போக சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்கிறார் ராஜா. வெளியே வந்து நொந்து போய் அமர்கிறார் அமர். 




அமருக்காக ராஜா கம்பேசிங்கை நிறுத்திய வெங்கடேஷ்!


இப்போ என்ன  செய்வது என தெரியாமல், அங்கே அமர்ந்திருக்கிறார் அமர். அப்போ அங்கு வந்த இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ்(அவர் தான் இளையராஜாவிற்கு வாய்ப்பு தந்தவர்), ‛என்ன இங்கே உட்கார்ந்திருக்க...’ என கேட்டுள்ளார். அமர் விசயத்தை கூறியுள்ளார். ‛சரி வா... என் கூட...’ என அவரை அழைத்துக் கொண்டு, ஸ்டூடியோ உள்ளே அழைத்து செல்கிறார் வெங்கடேஷ். உள்ளே கம்போசிங்கில் இருக்கிறார் இளையராஜா. அதை நிறுத்தச் சொன்ன வெங்கடேஷ், ‛ஏன் இவனை போக சொல்ற... நீ அப்போ வந்தப்போ நான் உன்னை போகச் சொல்லிருந்தா... இப்போ நீ வந்திருக்க முடியுமா?’ என்று கேட்டுள்ளார். தன்னிடம் சொல்லாமல் அமர் இப்படி பண்ணிட்டானே என்கிற கோபம் தான் ராஜாவுக்கு. ‛இங்கே பாரு... இவன் இல்லாட்டி வேறு யாரோ மியூசிக் பண்ணப்போறாங்க... அதுக்கு இவனே பண்ணட்டுமே... அவனை எதுவும் சொல்லாத’ என அறிவுரை சொல்லிட்டு கிளம்பினார் வெங்கடேஷ். அவர் பேச்சுக்கு எப்போதும் இளையராஜா மறுபேச்சு பேசுவதில்லை. அதிலிருந்த உண்மையையும் அவர் புரிந்திருந்தார். ஆனாலும் அமரால் அதற்கு முன் நடந்ததை அவ்வளவு எளிதாக மறக்க முடியவில்லை.





ராஜாவிற்கு பதில் அமருக்கு சென்ற வாழ்வே மாயம்!  


இருந்தாலும் அதிலிருந்து மீண்டு, அந்த படத்திற்காக நல்ல இசையை தந்தார் அமர். ஆனால் படம் வெளியாகவில்லை. அதன் பின் அவருக்கு படங்கள் வரத்தொடங்கின. ஒரு விடுகதை ஒரு தொடர்கதை என்கிற படம் தான் அமர் இசையமைத்து முதலில் வந்தது. தனி இசையமைப்பாளராக இருந்தாலும், இளையராஜாவுக்கு கித்தார் வாசிப்பதை அவர் நிறுத்தவில்லை. இப்படி போய் கொண்டிருந்த நாளில் தான், திடீரென ஒரு நாள் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜியிடம் அமருக்கு அழைப்பு. வாழ்வே மாயம்னு ஒரு படம். நீ தான் பண்ணனும் என கூறுகிறார் பாலாஜி. ‛இல்லண்ணே... அண்ணே இருக்கும் போது நான் எதுக்கு...’ என தவிர்க்க முயற்சிக்கிறார் அமர். ‛இல்லப்பா... அவர் கொஞ்சம் அதிக சம்பளம் கேட்பாரு... ரீமேக் தானே அதில் இருக்கிற பாட்டை போட்டுக்கலாம்... நீயே பண்ணேன்...’ என கூறியுள்ளார் பாலாஜி. அப்போது இளையராஜாவின் சம்பளம் ரூ.7500. அமருக்கும் அது தெரியும். இது பெரிய சம்பளமா... என மனதிற்குள் நினைத்துக் கொண்டு, சரி நம்மை தேடி வர்றாங்க... பண்ணுவோம் என ஒப்புக் கொண்டார். எம்.எஸ்.வி., அழைத்து பாலாஜியிடம் கேட்டுள்ளார். ஏன் ராஜாவை போடலே என. இல்லைண்ணே... இது ரீமேக்... அதிலிருந்து பாடல்களை எடுக்கிறோம் அது தான் என அவரை சமாளித்துள்ளார் பாலாஜி. ஆனால் அனைத்திற்கும் புதிய ட்யூன் போட்டு பாடல்களை வேற லெவலுக்கு கொண்டு சென்றார் அமர். 




தீபாவளி இரவில் அழைத்து திட்டிய பஞ்சு அருணாச்சலம்!


வாழ்வே மாயம் பாடல்கள் சூறாவளி ஹிட். இன்றைக்கும் அதற்கு இசை இளையராஜா என்று தான் பலரும் நினைத்திருக்கிறார்கள். அது அக்மார்க் அமரின் ராகம். வாழ்வே மாயம் எங்கு பார்த்தாலும் பேசப்படுகிறது. தீபாவளி இரவு அன்று பஞ்சு அருணாச்சலத்திடம் இருந்து அமருக்கு அழைப்பு. அவரும் ஓடுகிறார். அங்கு இளையராஜாவும் அமர்ந்திருக்கிறார். அருணாச்சலம் அமரை திட்டுகிறார். அமருக்கு எதுவும் புரியவில்லை. சிறிது நேரம் கழித்து தான், அது கலாய்ப்பு என புரிந்து கொள்கிறார். ‛ஒன்னுமில்ல... கோழி கூவுதுனு ஒரு படம் பண்றோம்... நீ தான் டைரக்டர்னு...’ சொல்றாரு பஞ்சு. அமருக்கு ஒரே ஷாக்... அதுவரை யாரிடமும் உதவியாளரா கூட அவர் வேலை பார்த்தது இல்லை. அதை பற்றி பெரிய புரிதலும் இல்லை. இசையாய் போய் கொண்டிருந்த வாழ்க்கை. இப்போ போய் டைரக்ஷன்... வாய்ப்பு. வாழ்வே மாயம் தந்த வாழ்வில் சிவாஜி உள்ளிட்ட முக்கிய ஹீரோக்களின் படங்கள் பல குவிந்து கிடக்கிறது. சரி இதையும் பார்க்கலாம் என அதிலும் கால் வைக்க முடிவு செய்தார் கங்கை அமரன். 




கிரீடம் இல்லை என்றாலும் அதிலுள்ள வைரம் அமர்!


இப்போ தேடாமல் பட வாய்ப்பு வந்திருக்கிறது. அதை பற்றி புரிதல் இல்லை என்றாலும் சினிமா தெரியும். யாரிடமும் எந்த ஆலோசனையும் செய்யாமல் களமிறங்கினார் கங்கை அமரன். கோழி கூவுது நல்ல ஹிட். எதுவுமே தெரியாமல் இயக்குனராக அறிமுகமான கங்கை அமரன், அதன் பின் 17 படங்களை இயக்கினார். அதில் வெற்றியும் பெற்றார் என்பது தான் வரலாறு. இதற்கிடையில் பாடலாசிரியராகவும் ஜொலித்தார். அவரின் பாடல் திறமையை தொடர்ந்து அங்கீகரித்தவர் பாரதிராஜா. ராஜாக்கள் கூட்டத்தில் தனி ரோஜாவாக மணம் வீசியவர் அமர். இளையராஜா என்கிற கிரீடத்தை நாம் கொண்டாடுகிறோம். அதற்கு அவர் முழு தகுதியானவரும் கூட. அதே போல் தான் அமரும். கிரீடமாக இல்லை என்றாலும் அதிலுள்ள வைரமாக ஜொலித்தவர். நல்ல கித்தார் பிளேயர்... இசையோடு அசை போடுபவர். இருந்தாலும் அதை அடைய அவரும் சில அவமானங்களை விலை கொடுக்க நேர்ந்தது என்பது தான் உண்மை.