மயிலாடுதுறை: தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-க்கான வேட்புமனுத் தாக்கல் இன்று விறுவிறுப்புடன் தொடங்கியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி மற்றும் பூம்புகார் ஆகிய மூன்று தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் விவசாயப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில், ஏர்க்கலப்பையைச் சுமந்தபடி மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக வந்து தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

Continues below advertisement

மயிலாடுதுறையில் முதல் மனுவைத் தாக்கல் செய்த காசிராமன்

மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சுற்றுச்சூழல் பாசறையின் மாநிலத் துணைத் தலைவர் காசிராமன், இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக, மயிலாடுதுறை போக்குவரத்துக் கழக பணிமனை முன்புள்ள சட்டமேதை அம்பேத்கர் சிலைக்கு, கட்சி நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, "விவசாயமே அடிப்படை" என்பதை வலியுறுத்தும் வகையில், தனது தோளில் ஏர்க்கலப்பையைச் சுமந்து கொண்டு மாட்டு வண்டியில் ஏறி ஊர்வலமாகப் புறப்பட்டார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற இந்தப் பேரணியில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இறுதியில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்த அவர், தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணு பிரியாவிடம் தனது மனுவை ஒப்படைத்தார். இவருடன் மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர் காளிதாஸ் உடனிருந்தார். மேலும், இத்தொகுதியில் மாற்று வேட்பாளராக சுப்ரமணியன் என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.

Continues below advertisement

சீர்காழி: அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்து பேரணி

சீர்காழி (தனி) சட்டமன்றத் தொகுதியிலும் நாம் தமிழர் கட்சியினர் தங்களது தேர்தல் களப்பணியை நூதன முறையில் தொடங்கினர். இத்தொகுதியின் வேட்பாளர் சுபாஷ் மாட்டு வண்டியில் ஏர் கலப்பையுடன் வர அவரது ஆதரவாளர்களும் அணிவகுத்து வந்தனர். சீர்காழியின் முக்கிய கடைவீதிகள் வழியாகச் சென்ற இந்தப் பேரணி, புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் கோட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தது.

தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷிடம் தனது வேட்புமனுவை அவர் தாக்கல் செய்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர். "மாற்றம் என்பது சொல் அல்ல, செயல்" என்பதை உணர்த்தும் வகையில் எளிய முறையில் மாட்டு வண்டியில் வந்த வேட்பாளரை மக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.

பூம்புகார்: இருசக்கர வாகனத்தில் தொடங்கி மாட்டு வண்டியில் நிறைவு

பூம்புகார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மாநில மீனவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இளைய நகுலன், தனது வேட்புமனுத் தாக்கலை ஒரு நீண்ட பேரணியாக நடத்தினார். ஆக்கூர் முக்கூட்டுப் பகுதியிலிருந்து தனது ஆதரவாளர்களுடன் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் பேரணியாகப் புறப்பட்டார். பின்னர் பொறையார் பழைய பேருந்து நிலையத்தை அடைந்த அவர், அங்கிருந்து மாட்டு வண்டியில் ஏர்க்கலப்பையுடன் ஊர்வலமாகச் சென்றார்.

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது மனுவைத் தாக்கல் செய்த இளைய நகுலன், விவசாயம் மற்றும் மீனவர் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்யப்போவதாகத் தெரிவித்தார்.

அதிகாரிகள் ஆய்வு மற்றும் பாதுகாப்பு

வேட்புமனுத் தாக்கல் நடைபெற்ற அனைத்து அலுவலகங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனிடையே, மயிலாடுதுறை மற்றும் சீர்காழி தொகுதிகளுக்கான தேர்தல் செலவினப் பார்வையாளர் ரூபேஷ் அக்ரவால், வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் இடங்களுக்கு நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்தார். தேர்தல் நன்னடத்தை விதிகளின்படி ஊர்வலங்கள் நடைபெறுகின்றனவா என்பதையும் அதிகாரிகள் கண்காணித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தின் மூன்று முக்கிய தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியினர் ஒரே நாளில், ஒரே மாதிரியான விவசாயப் புரட்சி அடையாளங்களுடன் மனுத்தாக்கல் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.