Annamalai BJP TN Election 2026: கோவை வந்திருந்த பிரதமர் மோடியை வரவேற்க அண்ணாமலை விமான நிலையம் செல்லாதது தமிழக பாஜகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சைலண்ட் மோடி ல் அண்ணாமலை
தமிழக அரசியலில் பூப்பாதையில் சென்றுகொண்டிருந்த பாஜகவை அதிரடியான பாதைக்கு கொண்டு சென்றதில், கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு பெரும் பங்கு உண்டு. இதனால் நகர்ப்புறங்களை தாண்டில் கிராம அளவிலும் பாஜகவின் பெயர் சென்றடைந்தது. இதனால் அவரது தலைமையிலேயே நடப்பாண்டு சட்டமன்ற தேர்தலையும் பாஜக எதிர்கொள்ளும் என கருதப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக கடந்த ஆண்டு தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு, நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். அதுமுதலே தீவிர அரசியலில் தனது வேகத்தை அண்ணாமலை மெல்ல மெல்ல குறைத்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள சூழல், பாஜகவிலிருந்து ஒட்டுமொத்தமாகவே அவர் ஓரங்கட்டப்படுகிறாரா? அல்லது சுயமாகவே ஒதுங்குகிறாரா? என்ற கேள்வியை எழச்செய்துள்ளது.
ஒதுங்கும்? ஓரங்கட்டப்படும்? அண்ணாமலை
மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, குறிப்பிடத்தக்க வகையிலான பெரிய பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை என அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து, தொகுதி பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டபோது, தனிப்பட்ட காரணங்களால் அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதிமுக கூட்டணியில் இருந்து 27 தொகுதிகளை பெற்றபோதும், அண்ணாமலையின் சொந்த மாவட்டமான கரூரிலிருந்து ஒரு தொகுதியை கூட பாஜக கேட்டு பெறவில்லை. இதனால், தேர்தலில் அவர் போட்டியிடுவதே கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் தான், நேற்று (மார்ச் - 29) கோவை வந்த பிரதமர் மோடியை வரவேற்க அண்ணாமலை செல்லாதது பேசுபொருளாகியுள்ளது.
லிஸ்டில் இல்லாத அண்ணாமலை பெயர்..
பிரதமரை வரவேற்க அண்ணாமலை வராதது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக எம்.எல்.ஏ., வானதி ஸ்ரீனிவாசன், “வந்த உடனே நானும் அதைத்தான் கேட்டேன். வரவேற்பு பட்டியலில் அவரது பெயர் சேர்த்துத்தான் அனுப்பினோம். அவர் தான் வரவில்லை' என பதிலளித்துள்ளார். ஆனால் பிரதமரை வரவேற்க அனுமதிக்கப்பட்ட பிரமுகர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில், பாஜக, அதிமுக மற்றும் கூட்டணியில் உள்ள பாமக, அமமுக, தமாகா மற்றும் ஐஜேகே போன்ற கட்சிகளின் பிரமுகர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. ஆனால், அண்ணாமலையின் பெயர் இடம்பெறவே இல்லை. அப்படி இருந்தும் அவரது பெயர் இருப்பதாக வானதி ஸ்ரீனிவாசன் கூறியது ஏன்? என்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
அண்ணாமலையின் பழைய கர்மாவா?
அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றதும் முன்னாள் நிர்வாகிகள் பலரையும் ஓரங்கட்டினார். தன்னையே அதிகார மையமாக வார்த்தெடுத்து, ஒட்டுமொத்த தமிழக பாஜகாவும் தான் மட்டுமே என்ற பிம்பத்தையும் கட்டமைத்தார். இதனால் மாநிலத்தில் பாஜகவை வளர்த்த நேரத்தில், தன்னை கொங்கு மண்டலத்தின் புதிய தலைவராக மேம்படுத்திக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்தினார். குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே பாஜகவில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற நிலையை, அண்ணாமலை முற்றிலுமாக மாற்றி அமைத்ததாக கூறப்படுகிறது. களத்தில் இறங்கி வேலை செய்வதோடு தனக்கு ஆதரவாகவும், உண்மையாகவும் இருப்பவர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் அளித்தார். இதனை விரும்பாத மற்றும் ஓரங்கட்டப்பட்ட சீனியர்கள் அனைவரும், அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதுமே அவருக்கு எதிராக செயல்பட தொடங்கிவிட்டனராம். மீண்டும் அவர் கட்சியில் வளர்ந்துவிடவேக் கூடாது என பலதரப்பில் இருந்தும் ஏராளமான உள்ளடி வேலை பார்க்கப்படுகிறதாம். இதற்கு, கொங்கு பெல்டில் அண்ணாமலை அதிகார மையமாக வளர்வதை விரும்பாத, அதிமுக தரப்பு உதவுகிறதாம். அதன் காரணமாகவே, கரூரில் ஒரு தொகுதியை கூட ஒதுக்காததோடு, பாஜக வலுவாக உள்ள கோவையிலும் ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கியுள்ளதாம். இருப்பினும், வெற்றி வாய்ப்பில்லாத ஏதேனும் ஒரு தொகுதியில் அண்ணாமலையை இறக்கி, தோல்வியை பரிசாக வழங்க பாஜகவின் பிரமுகர்கள் பலரும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனராம்.
அண்ணாமலைக்கு கட்டம் சரியில்லையா?
திருப்பூரிலாவது ஒரு தொகுதியை பெற்று அண்ணாமலை போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர். ஆனால், கட்டம் சரியில்லாததால் அடுத்த ஓராண்டிற்கு “அமைதி, அமைதி” என இருந்துவிடலாம் என்று அவர் ஆலோசித்து வருகிறராம். இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின்படி, அண்ணாமலைக்கு நான்கு ஆண்டுகளுக்கு வளர்ச்சியே இருக்காதாம். கட்டங்கள் சரியில்லாததால் தான், கடந்த மக்களவை தேர்தலில், வலுக்கட்டாயமாக போட்டியிட வைக்கப்பட்டு தோல்வி கண்டதாகவும், பாஜக மாநில தலைவர் பதவியையும் இழந்ததாகவும் அண்ணாமலையின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்ணாமலைக்கு வார்னிங்
அண்மையில் கூட பெங்களூரில் தனது ஆஷ்டான ஜோதிடரை அண்ணாமலை சந்தித்தாராம். அப்போது, இன்னும் ஓராண்டுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டாராம். மோசமான காலகட்டத்தில் வலுக்கட்டாயமாக எடுக்கும் முடிவு பெரிய ஆபத்தை தரும். மூன்றாவது முறையும் தோற்றால், அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். உங்களின் எதிரிகள் வீழ்ச்சி அடையும் நேரம் இது என்பதால், பொறுமையாக இருங்கள் என அண்ணாமலை அறிவுறுத்தப்பட்டுள்ளாராம். இதனை கருத்தில் கொண்டு இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவே வேண்டாம் என அண்ணாமலை திட்டமிட்டுள்ளாராம்.
