தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேட்பாளர் சிலர் வாக்கு சேகரிக்கும் முறையில் வித்தியாசத்தை காட்டி வருகின்றனர். இதில் சில கவனத்தை ஈர்க்கிறது, மற்ற சிலர் செய்வது நகைச்சுவையாகவும் மாறுகிறது. இந்நிலையில் மதுரை வேட்பாளர் ஒருவர் தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு தி.மு.க வழங்கிய பொங்கல் தொகுப்பை காட்டி அதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி வாக்கு சேகரித்து வருகிறார்கள்.






 

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளை உள்ளடக்கிய வார்டுகளில் போட்டியிடக் கூடிய பிரதான கட்சியான தி.மு.கவின் வேட்பாளர்கள் தங்கள் பகுதியில் வாக்காளர்களை கவரும் வண்ணம் நூதன முறையில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை அ.தி.மு.க பெண் வேட்பாளரும் மதுரை மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளருமான  சுகந்தி அசோக் மதுரை  மாநகாராட்சி 32ஆவது வார்டில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தி.மு.க பொறுப்பேற்றதற்கு பின் வழங்கிய பொங்கல் தொகுப்பு குறித்து மக்களிடம் விளக்கி வாக்கு சேகரித்து வருகிறார்.

 

அதில் பொங்கல் தொகுப்பு வழங்கியதில் ஏற்பட்ட குளறுபடி மற்றும் தரமற்ற பொங்கல் தொகுப்பு குறித்தும் விளக்கி வருகிறார். மேலும் அவர் பிரச்சாரத்தி போது பேசுகையில் “அ.தி.மு.க ஆட்சியின்போது ஏழை எளிய மக்களும் தித்திக்கும் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் ரூபாய் 2500 மற்றும் பொங்கல் தொகுப்பிற்கு தேவையான அனைத்து பொருட்களுடன் முழுநீள கரும்பையும் அதிமுக அரசு வழங்கியது.  ஆனால் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கொண்டு பொய் வாக்குறுதிகளை மட்டுமே 24 மணி நேரமும் தாரக மந்திரமாகக் கொண்டுள்ள திமுக அரசு ‘தமிழுக்கும் தமிழர் நலனுக்கும் தமிழர்களுக்காகவும் நாங்கள் பாடுபடுவோம் அதற்கான அரசுதான் திமுக  அரசு’ என்று கூறிவிட்டு பொது மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு  ஏராளமான பொருட்கள் இருந்ததாக தமிழகத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் குற்றச்சாட்டும் எழுந்து வந்தது.



 

பயன்படுத்த முடியாத வெல்லம் தரமற்ற பருப்புவகைகள் குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டபொருட்கள் இப்படி ஏராளமான சர்ச்சைகள் உடன் பொங்கல் தொகுப்பை வழங்கியது திமுக அரசு. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த உடன் மக்களுக்கான திட்டம் என்று சொல்லிவிட்டு தரமற்ற உபயோகத்திற்கு பயன்படுத்தாத பொருட்களை வழங்கிய இந்த திமுக அரசை வேரோடு அறுக்க, மக்களுக்கான திட்டங்களை கொடுத்து மக்களுக்காக பாடுபடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மதுரை மாநகராட்சியில் அதிமுகவின் கோட்டை என்கின்ற வகையில் மீண்டும் இரட்டை இலைக்கு ஆதரவு தெரிவித்து உங்களது பொன்னான வாக்குகளை தாருங்கள்”.  என்றார். இது குறித்து வேட்பாளர் சுகந்தியிடம் கேட்ட போது”  திமுக அரசு மக்களை பொய் வாக்குறுதி கூறி ஏமாற்றிய செயல் அவர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நூதன பிரச்சாரம் செய்தோம்” என்று தெரிவித்தார்.