மதுரை நாடாளுமன்ற தேர்தலுக்கு போட்டியிட தூக்குக்கயிறு உடன் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர்.


 

தேர்தல் திருவிழா 2024

 

நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாடு உள்ள 39 தொகுதிகள், ஒரு தொகுதியை கொண்ட புதுச்சேரிக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையொட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அறிவித்தபடி தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கி வரும் 27 ஆம் தேதி வரை நடக்கிறது.

 


 

தேர்தல் பாதுகாப்பு


குறிப்பாக தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் தொலைவிற்கு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடத்தும் அலுவலக வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் மத்திய துணை ராணுவத்தினர் உள்பட ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்பு மனுக்கான படிவங்கள் மற்றும் ஆவணங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். 



தூக்கு கயிறு

 


மதுரை நாடாளுமன்ற தேர்தலுக்கு போட்டியிட தூக்குக்கயிறு உடன் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர்.

 


மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் சங்கர பாண்டியன் (சுயேட்சை வேட்பாளர்). இவர் நீர்வள ஆதாரங்கள் பாதுகாப்பு மற்றும் மக்கள் பொதுநல அறக்கட்டளை என்னும் அமைப்பு வைத்துள்ளார். இவர் தற்போது நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு மதுரையில் போட்டியிட மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்தார். அப்போது அவர் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஊழல்வாதிகளுக்கு வாக்களித்தால் அது தற்கொலை செய்வதற்கு சமம் என்றும், மேலும் வாக்குக்காக பணம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகள் மற்றும் தூக்கு கயிறு உடன் போலியான ரூபாய் நோட்டுகளை இணைத்து மனுத்தாக்கல் செய்ய வந்தார். தொடர்ந்து பல்வேறு தேர்தல்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார்.