மதுரை பாராளுமன்ற தொகுதி

 

கோயில் நகரம் மதுரை அரசியல், கலை,  பண்பாட்டுக்கும்  தலைநகராகவும் விளங்குகிறது. உலக நாடுகளே வியக்கும் அளவிற்கு  தொல்நகரங்களில் மதுரையும் ஒன்று. அதனால்தான் மதுரையின் வரலாறு என்பது, தமிழ் மக்களின் வாழ்வியலோடு கலந்துள்ளது. மீனாட்சியம்மன் கோயில் அழகர்கோவில், தெப்பக்குளம் சினிமாவும், சித்திரையில பெருவிழாவும்,  என கொண்டாட்டம் நிறைந்த மதுரை நாடாளுமன்றத் தொகுதி 1952-ல் உருவானது. மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி என நகருக்குள்ளேயே 5 தொகுதிகளும், புறநகரில் மேலூர் என '6' சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. இதுவரை நடந்த 17 தேர்தல்களில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் 8 முறையும், கம்யூனிஸ்ட் கட்சிகள் 5 முறையும் வாகை சூடியுள்ளது. தி.மு.க, அ.தி.மு.க, த.மா.க, ஜனதா கட்சி தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது.  1957-ல் கே.டி.கே தங்கமணி, 1967-ல்  பி.ராமமூர்த்தி அதன்பிறகு பி.மோகன் 2 முறையும், கடந்த நாடாளுமன்ற தேர்தலிக் சு.வெங்கடேசனையும் சேர்த்த 5  முறை கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்றுள்ளார்கள்.

 

மதுரை மக்கள் மனதை வென்ற எம்.பி.,

 

மதுரை ஹார்விப்பட்டியில் ஆலைத்தொழிலாளர் குடும்பத்தில் பிறந்த சு.வெங்கடேசன், கல்லூரி காலத்தில் கவிதை, இலக்கியம் என்று பயணித்தவர் த.மு.எ.க.ச-வில் இணைந்து கவிஞராக அறியப்பட்டார். அதன் பின்பு  சி.பி.எம் கட்சியில் இணைந்து முழுநேர ஊழியராக செயல்பட்டார். அதேநேரம் கவிதை, கட்டுரை, புதினம் என்று எழுதி தீவிர இலக்கியவாதியாக அறியப்பட்டார். 2011- ஆம் ஆண்டு இவர் எழுதிய காவல் கோட்டம் நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்ததன் மூலம் தமிழகம் முழுவதும் மேலும் பிரபலமானார். கூடவே, 'மாமதுரை போற்றுதும்' நிகழ்வை சிறப்பாக நடத்தி மதுரை மக்களை பண்பாட்டு ரீதியாக இணைத்தார். அவர் எழுதிய வைகை நதி நாகரிகம் என்ற நூல் மூலம், முடக்கப்படவிருந்த கீழடி தொல்லியல் பெருமைகள் வெளிவரக்காரணமானார். வீரயுக நாயகன் வேள்பாரி நாவலும் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. 2011-ல் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் தொடர்ச்சியாக கட்சி பணி செய்து 2019-நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 1,39,395 வாக்குகள் அதிகம் பெற்று அ.தி.மு.க-வின் ராஜ்சத்யனை தோற்கடித்து சாதனை படைத்தார். தற்போது இந்தாண்டு 2024-தேர்தலில் தி.மு.க.,கூட்டணி சார்பாக சு.வெங்கடேசனே களம் இறக்கப்பட்டுள்ளார்.

 

மக்களின் மருத்துவர்

 

அதே போல் 2024- தேர்தல் களத்தில் அ.தி.மு.க., சார்பில் டாக்டர் சரவணன் களம் இறக்கப்பட்டுள்ளார். டாக்டர் சரவணன் மதுரையில் சரவணா ஹாஸ்பிட்டல் உரிமையாளராக இருந்து சினிமா மீது இருந்த ஆர்வத்தால் அகிலன் என்ற திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து அந்த படத்தை அவரே தயாரித்தார். பின்னர் ம.தி.மு.க.,வில் இணைந்து பணி செய்த போது பின்னர் பி.ஜே.பி.,யில் இணைந்து பணி செய்தார். அதனை தொடர்ந்து தி.மு.க., வில் இணைந்து பணி செய்தார். திருப்பரங்குன்றம் சட்ட மன்ற தொகுதியில்  வெற்றி பெற்ற அவருக்கு தொடர்ந்து தி.மு.க.,வில் சீட் வழங்கப்படவில்லை. இந்த அதிர்ச்சியால் பா.ஜ.க.,வில் இணைந்தார். இதனை தொடர்ந்து ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்த வந்த பி.டி.ஆரின்., கார் மீது பி.ஜே.பி.,யினர் செருப்பு வீசிய சம்பவத்தை தொடர்ந்து பி.டி.ஆரை சந்தித்து பி.ஜே.பி.,யில் இருந்து விலகினார். ஆனால் தி.மு.க.,வில் மீண்டும் இணைவார் என்று எதிர்பார்த்த சூழலில் தி.மு.க.,வில் பச்சைக் கொடி காட்டாததால் தற்போது அ.தி.மு.க.,வில் இணைந்து செல்லூர் ராஜூ ஆதரவு மூலம் அதிமுக.,வில் சீட் வாங்கியதாக சொல்லப்படுகிறது. 

 

மதுரை பாராளுமன்ற தொகுதியில்  பல்வேறு கட்சிகள் வேட்பாளர் அறிவிக்காத சூழலில் தி.மு.க., கூட்டணியில் களம் காணும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் மற்றும் அதிமுக வேட்பாளர் சரவணனுக்கும் தான் கடுமையான போட்டி நிலவும் என சொல்லப்படுகிறது.