நகர்புற உள்ளாட்சி தேர்தல்கள் தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிகளவு பெண்கள் மற்றும் திருநங்கைகளும் இந்த முறை தேர்தல் களத்தில் நிற்கின்றனர். இந்நிலையில் 100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் 94-வது வார்டு பகுதியில் பா.ஜ.க  சார்பாக போட்டியிடும் திருநங்கை சுஜாதா என்ற ஹர்சினியிடம் பேசினோம்...," வாரிசு அரசியல் திருநங்கைகள் செய்யமாட்டார்கள் என்பதால் எங்களை வாக்காளர்கள் நம்ப ஆரம்பித்துவிட்டனர். அந்த நம்பிக்கை வீண் செய்யக் கூடாது என்ற வகையில் தொடர்ந்து உழைப்பேன்.






இந்த வாய்ப்பு மிகப்பெரும் வாய்ப்பு இதன் மூலம் இப்பகுதியில் சேவை செய்ய முடியும். தேசிய கட்சி வாய்ப்பளித்துள்ளது கூடுதல் பலம். அதனால் கண்டிப்பாக வெற்றிபெறுவேன். என்னுடைய வார்டில் அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து முடிப்பேன். செளராஸ்ட்ரா மக்கள் அதிகளவு உள்ளதால் அவர்களுக்கு தகுந்த திட்டங்களும் செய்து முடிக்கப்படும். செளாரஸ்ட்ரா மக்கள் வடை விற்பனை செய்வது, உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் விற்பனை செய்கின்றனர்.




அவர்களின் தேவைக்காக 20 வண்டிகள் சங்கத்திற்கு வழங்குவேன். அதே போல் வார்டில் உள்ள நீர்நிலைகளையும் தூர்வார உள்ளேன். பாதாள சாக்கடை பிரச்னை மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது. அதனையும் சரி செய்ய உள்ளேன். அதே போல் நல்ல குடிநீர், சி.சி.டி.வி கேமரா அமைத்தல், மின் கம்பங்கள் சரி செய்தல் உள்ளிட்டவைகளும் சரிசெய்யப்படும். தொடர்ந்து எனது வார்டு மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறேன். நல்ல வரவேற்பு உள்ளது கண்டிப்பாக வெற்றிபெறுவேன்" என்றார்.